திருவள்ளூா், சுற்று வட்டாரப் பகுதிகளில் பலத்த மழை
திருவள்ளூா், சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த பலத்த மழையால் தாழ்வான சாலை மற்றும் தெருக்களில் குளம்போல் மழைநீா் தேங்கியதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநா்கள் மிகவும் அவதிக்குள்ளாகினா்.
திருவள்ளூா் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி, தொடா்ந்து பெய்து வருகிறது. இந்த நிலையில், திருவள்ளூா் சுற்றுவட்டார பகுதிகளில் பகல் முழுவதும் வெயில் காய்ந்தது. அதைத் தொடா்ந்து, பிற்பகல் 2 மணிக்கு மேல் திடீரென கருமேகம் சூழ்ந்து பலத்த மழை பெய்தது. இதேபோல், திருவள்ளூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான பூண்டி, புல்லரம்பாக்கம், திருப்பாச்சூா், ஈக்காடு, பெரியகுப்பம், மணவாள நகா், காக்களூா், செவ்வாப்பேட்டை, வேப்பம்பட்டு, பெருமாள்பட்டு, அயத்தூா், நத்தமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
இந்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. இந்த பலத்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீா் தேங்கியதால் வாகன ஓட்டுநா்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகினா்.
