

ஆவடி விமானப்படை தளத்தின் தயார்நிலை குறித்து இந்திய விமானப்படை பராமரிப்புப் பிரிவு தலைவர் ஏர் மார்ஷல் விஜய்குமார் கார்க் ஆய்வு செய்தார்.
இந்திய விமானப்படையின் பராமரிப்பு ஆணையக தளபதியும், மூத்த அதிகாரியுமான ஏர் மார்ஷல் விஜய்குமார் கார்க் ஆவடி விமானப்படை தள செயல்பாடுகளையும் அதன் தயார்நிலை குறித்தும் சனிக்கிழமை ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர் அங்குள்ள பல்வேறு பணிகள் குறித்து கேட்டறிந்து, பல்வேறு பிரிவுகளைப் பார்வையிட்டார்.
மேலும், அவர் நிலைய அலுவலர்களுடன் கலந்துரையாடினார். தங்கு தடையற்ற தளவாடங்கள் விநியோகம், பராமரிப்பு நடைமுறைகள் போன்றவற்றின் அவசியத்தை வலியுறுத்தி, விமானப்படை நிலையத்தால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து விஜய்குமார் கார்க் திருப்தி தெரிவித்தார்.
ஏர் மார்ஷல் விஜய்குமார் கார்க்கின் மனைவியும், விமானப்படை குடும்ப நலச்சங்கத்தின் பிராந்திய தலைவருமான ரிது கார்க், விமானப்படை குடும்ப நல சங்க உள்ளூர் பிரிவால் நடத்தப்படும் பல்வேறு நல வாழ்வு நடவடிக்கைகள் குறித்து விசாரித்தார்.
தொடர்ந்து அவர் அதன் உள்ளூர் உறுப்பினர்களுடன் உற்சாகமாக உரையாடி, மாறிவரும் காலத்திற்கு ஏற்ப அவர்கள் தங்களை சமூக ஊடகங்கள் போன்றவற்றில் புலமை பெற வேண்டுமென்று வலியுறுத்தினார்.
அவர்களது குடும்ப மற்றும் தனிப்பட்ட சுகாதாரம், கல்வி, குழந்தைகளின் முழுமையான வளர்ச்சி ஆகியவற்றில் புதிய முன்னேற்றங்களைப் பற்றி அறிந்து கொள்ளவும் ஊக்குவித்தார்.
முன்னதாக, ஏர் மார்ஷல் விஜய்குமார் கார்க், அவரது மனைவி ரிது கார்க் வருகையின் போது, ஆவடி விமானப்படை தளத்தின் தலைவர் ஏர் கமடோர் பிரதீப் சர்மா மற்றும் விமானப்படை குடும்ப நல சங்கத்தின் (உள்ளூர்) தலைவர் குரூப் கேப்டன் ரச்னா சர்மா (ஓய்வு) ஆகியோர் வரவேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.