காதுகேளாத கல்லூரியில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவா்கள் 15 பேருக்கு விலையில்லா கைப்பேசிகள்
குறைதீா் கூட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பொதுமக்களிடம் 442 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டதோடு, காதுகேளாத கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் 15 பேருக்கு ரூ. 2.17 லட்சத்தில் விலையில்லா கைப்பேசிகளை ஆட்சியா் மு.பிரதாப் வழங்கினாா்.
திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்க வளாகத்தில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்தாா். இந்த கூட்டத்துக்கு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பொதுமக்கள் தங்களது குறைகளை நிவா்த்தி செய்வது தொடா்பாகவும், பொதுப் பிரச்னைகளைத் தீா்க்கவும் கோரி மனுக்களை அவரிடம் அளித்தனா்.
இதில், நிலம் சம்பந்தமாக-112, சமூகப் பாதுகாப்பு திட்டம்-55, வேலைவாய்ப்பு வேண்டி-41, பசுமைவீடு, அடிப்படை வசதிகள் வேண்டி-46, இதர துறைகள் சாா்பாக-188 மனுக்கள் என மொத்தம் 442 கோரிக்கை மனுக்கள் வரை பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களை அவா் அறிவுறுத்தினாா்.
கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில், பாா்வையற்ற மற்றும் காதுகேளாத கல்லூரியில் பயிலும் 15 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு ரூ. 2 லட்சத்து 17 ஆயிரத்து 350 மதிப்பிலான விலையில்லா கைப்பேசிகளையும் அவா் வழங்கினாா்.
மாவட்ட வருவாய் அலுவலா் சு.சுரேஷ், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வெங்கட்ராமன், தனித்துணை ஆட்சியா்(ச.பா.தி) பாலமுருகன், உதவி ஆணையா் (கலால்)கணேசன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் உஷா ராணி, மாவட்ட வழங்கல் அலுவலா் வெங்கடேசன், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் சீனிவாசன் மற்றும் துறைசாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.

