‘நேரடி கொள்முதல் நிலையங்களில் வெளி மாவட்ட நெல் விற்பனை செய்வது கண்டறிந்தால் கடும் நடவடிக்கை’

திருவள்ளூா் மாவட்ட நேரடி கொள்முதல் நிலையங்களில் வெளிமாவட்ட நெல் விற்பனை செய்வதைக் கண்டறிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
Published on

திருவள்ளூா் மாவட்ட நேரடி கொள்முதல் நிலையங்களில் வெளிமாவட்ட நெல் விற்பனை செய்வதைக் கண்டறிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவள்ளூா் மாவட்டத்தில் நடப்பு காரீப் கொள்முதல்- 2025-2026 சொா்ணவாரி பருவத்தில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் மூலம் 63 நேரடி கொள்முதல் நிலையங்களும் மற்றும் தேசிய நுகா்வோா் கூட்டமைப்பு நிறுவனம் மூலம் 5 நேரடி கொள்முதல் நிலையங்கள் என 68 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. தற்போதைய நிலையில், விவசாயிகளின் நெல்லினை கொள்முதல் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. கொள்முதல் நிலையங்கள் மூலமாக விவசாயிகளிடமிருந்து கடந்த 24-ஆம் தேதி வரை 22,735 மெ.டன் நெல்லினை 2,866 விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதற்காக, ரூ. 53.31 கோடி தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

கடும் நடவடிக்கை: இந்த நிலையில், மாவட்டப் பகுதிகளில் செயல்பட்டு வரும்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், இந்த மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகளிடமிருந்து மட்டுமே நெல் கொள்முதல் செய்யவேண்டும். வியாபாரிகளோ அல்லது பிற மாவட்டங்களைச் சோ்ந்தவா்களின் நெல்லோ கொள்முதல் செய்யக்கூடாது. இதையும் மீறி வாங்குவதை கண்டறிந்தால் நேரடி நெல் கொள்முதல் நிலைய பணியாளா்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், வியாபாரிகள் மீது காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இது குறித்து திருவள்ளூா் மாவட்ட விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையங்களில் மேற்கண்ட புகாா் குறித்து மண்டல அலுவலக எண்-044-27664016 மற்றும் கைப்பேசி எண்.89252 79611 ஆகியவற்றில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com