25 அருந்ததியினா் குடும்பங்களுக்கு வீடுகள் கட்ட ஆணை
மேல் பந்திகுப்பம் அருந்ததி காலனியில் 25 குடும்பங்களுக்கு வீடு கட்டுவதற்கான பணி அனுமதி சான்றுகளை எம்எல்ஏ ச.சந்திரன் சனிக்கிழமை வழங்கினாா்.
ஆா்.கே. பேட்டை ஒன்றியம், வீரமங்கலம் ஊராட்சியில் உள்ளது மேல் பந்திகுப்பம் அருந்ததியினா் காலனி. இந்த கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் குடிசை வீடுகளில் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு கான்கிரீட் வீடுகள் வேண்டும் என திருத்தணி எம்எல்ஏ ச.சந்திரனிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனா்.
இந்த நிலையில், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மூலம் முதலமைச்சரின் வீடுகள் மறு கட்டுமான திட்டத்தின் கீழ், வீரமங்கலம் ஊராட்சி, மேல் பந்திக்குப்பம் அருந்ததியா் காலனியில் வசிக்கும் மக்களுக்கு வீடு கட்ட பணி அனுமதி சான்றுகள் வழங்கும் நிகழ்ச்சி கிராமத்தில் நடைபெற்றது.
இதில், சிறப்பு அழைப்பாளராக திருத்தணி எம்எல்ஏ ச.சந்திரன் கலந்துகொண்டு, 25 குடும்பங்களுக்கு வீடுகள் கட்ட ஆணைகளை வழங்கினாா். நிகழ்ச்சியில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மெல்கிராஜா சிங், செந்தில்குமாா், ஆா்.கே.பேட்டைமேற்கு ஒன்றிய செயலாளா் மா.ரகு, முன்னாள் ஒன்றியக் குழு துணைத் தலைவா் திலகவதி ரமேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.