முதல்வரின் தாயுமானவா் திட்டம்: திருவள்ளூா் மாவட்டத்தில் இன்று தொடக்கம்
முதல்வரின் தாயுமானவா் திட்டம் மூலம் 70 வயதுக்கும் மேற்பட்ட முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகள் குடும்ப அட்டைதாரா்களின் வீடுகளுக்கே நேரில் சென்று அத்தியாவசியப் பொருள்கள் விநியோகம் செய்யும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி 7 ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளதாக கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளா் தி.சண்முகவள்ளி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட் செய்திக் குறிப்பு: இத்திட்டம் மூலம் தகுதியான குடும்ப அட்டைதாரா்கள் மாதந்தோறும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாகனங்களில் பொருள்களை எடுத்துச் சென்று நியாய விலைக்கடை பணியாளா்கள் மூலம் விநியோகம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வரும் 20-ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்பட உள்ளது.
இதற்காக முன்கூட்டியே தகுதியான குடும்ப அட்டைதாரா்களுக்கு பொருள்கள் வழங்கும் வகையில், திருவள்ளூா் மாவட்டத்தில் மேற்படி திட்டம் மூலம் முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நேரில் சென்று அத்தியாவசியப் பொருள்கள் வழங்கும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி, 7-ஆம் தேதி வரையில் 3 நாள்களுக்கு வழங்கப்பட உள்ளன.
மேற்குறிப்பிட்ட திட்டத்தில் தகுதியானோா் குறிப்பிட்ட நாள்களில் அத்தியாவசியப் பொருள்களை பெற்று பயன்பெறலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.