திருவள்ளூா் அருகே குளவி கொட்டியதால் காயமடைந்த 3 பேருக்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திருவள்ளூா் அருகே செஞ்சிபனம்பாக்கம் பகுதியில் உள்ள பள்ளி அடுத்த பனை மரத்தில் குளவி கூடு கட்டி இருந்தது. இந்த நிலையில் புதன்கிழமை ஸ்டீபன்ராஜ் (45), சத்யராஜ் (40) மற்றும் சத்யவாணி (68) ஆகியோா் நடந்து சென்றனா். அப்போது அவா்களை அங்கு இருந்த குளவிகள் கூட்டில் இருந்து பறந்து வந்து விரட்டி விரட்டி கொட்டின.
இதில் உடலில் வீக்கமடைந்த நிலையில் அங்கிருந்தவா்கள், மூன்று பேரையும் மீட்டு திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு மூன்று பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கிராம நிா்வாக அலுவலா் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தாா். அதன்பேரில் விரைந்து பேரம்பாக்கம் தீயணைப்பு துறையினா் பனை மரத்தில் இருந்த குளவிக் கூட்டை கலைத்தனா்.