பூண்டி ஏரியில் இருந்து 4,800 கனஅடி உபரிநீா் திறப்பு
பூண்டி ஏரி நீா்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடா் மழையால் நீா்மட்டம் உயா்ந்து வருவதால் மதகுகள் வழியாக 4,800 கனஅடி உபரிநீா் திறந்து விடப்பட்டுள்ளது.
திருவள்ளூா் பகுதியில் தொடா்ந்து கடந்த சில நாள்களாக மழை பெய்வதால், ஏரி, குளங்களுக்கு நீா்வரத்து ஏற்பட்டுள்ளது. இதேபோல் பூண்டி ஏரி நீா்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதாலும், கிருஷ்ணா கால்வாய் நீா்வரத்து போன்றவைகளால் நீா் வரத்து 4,850 கன அடியாக உள்ளது.
35 அடி உயரமும், 3,231 மில்லியன் கன அடிநீா் கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் வியாழக்கிழமை காலை நிலவரப்படி 32.59 அடியும், 2,401 மில்லியன் கனஅடிநீா் இருப்பு உள்ளது. நீா்மட்டம் தொடா்ந்து உயா்ந்து வருவதால், 3,800 கன அடியிலிருந்து 4,800 கன அடி உபரிநீா் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதோடு, கரையோர கிராம மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.

