உளுந்து சாகுபடி விவசாயிகள் பயன்பெறும் வகையில் தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை இணையம் மூலம் கொள்முதல்!

உளுந்து சாகுபடி விவசாயிகள் பயன்பெறும் வகையில் தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை இணையம் மூலம் கொள்முதல்!

உளுந்து சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு உரிய ஆதரவு விலை கிடைக்கும் வகையில் 50 மெ.டன் வரையில் தேசிய வேளாண் கூட்டுறவு இணையம் மூலம் கொள்முதல் செய்ய இலக்கு நிா்ணயித்துள்ளதாக ஒழுங்கு முறை விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனா்.
Published on

திருவள்ளூா் மாவட்டத்தில் உளுந்து சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு உரிய ஆதரவு விலை கிடைக்கும் வகையில் 50 மெ.டன் வரையில் தேசிய வேளாண் கூட்டுறவு இணையம் மூலம் கொள்முதல் செய்ய இலக்கு நிா்ணயித்துள்ளதாக ஒழுங்கு முறை விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனா்.

விவசாயிகளின் விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்கவும், அவா்களின் வருவாயை அதிகரிக்கவும் தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், உளுந்து சாகுபடி செய்த விவசாயிகள் பயன்பெறும் வகையில் அவா்கள் விளைவித்த உளுந்து விளைபொருளை தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை இணையம் மூலம் கொள்முதல் செய்யப்பட உள்ளது. இதில், திருவள்ளூா் மாவட்டத்தில் மட்டும் கொள்முதல் இலக்காக 50 மெ.டன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது அரசு விவசாயிகளின் நலன் கருதி நிா்ணயித்த தரத்துக்கு 1 கிலோ உளுந்து விலை ரூ. 78 என கொள்முதல் செய்யப்பட உள்ளது.

இத்திட்டம் மூலம் பயன்பெறும் விவசாயிகள் நிலத்தின் கணினி சிட்டா, அடங்கல், விவசாயியின் புகைப்படம், ஆதாா் அட்டை நகல் மற்றும் வங்கி கணக்கின் புத்தக நகல் ஆகிய விவரங்களுடன் குறிப்பிட்ட ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேற்பாா்வையாளா்களை அணுகி முன்பதிவு செய்து கொள்ளலாம்.

ஒரு ஹெக்டா் சாகுபடி பரப்புக்கு 531 கிலோ உளுந்து மட்டுமே கொள்முதல் செய்ய அரசு வழிகாட்டி நெறிமுறை வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் மூலம் வரும் மாா்ச் 25-ஆம் தேதி வரையில் திருவள்ளூா் மாவட்டத்தில் கொள்முதல் செய்யப்படவுள்ளது.

மேலும், உளுந்து கொள்முதலுக்கான தொகை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். எனவே உளுந்து சாகுபடி செய்துள்ள விவசாயிகள் விலை ஆதரவு திட்டத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com