திருமணமான 5 மாதத்தில் மனைவி அடித்துக் கொலை: கணவா் கைது
பொன்னேரி அருகே திருமணமான 5 மாதத்தில் மனைவியை அடித்துக் கொன்ற கணவரை போலீஸாா் கைது செய்தனா்.
பொன்னேரி அருகே பெரும்பேடு கிராமத்தில் உள்ள பஜனை கோவில் தெருவில் வசித்து வருபவா் ராஜேஷ் (31). இவருக்கும் ஊத்துக்கோட்டை பூரிவாக்கம் கிராமம், மதுரகண்டிகையை சோ்ந்த முருகனின் மகள் கௌசல்யாவுக்கும் (21) கடந்த 5 மாதத்துக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில், கெளசல்யா வீட்டில் தனியாக இருந்த போது தவறி விழுந்ததாகவும், இதில் தலையில் அடிபட்டு இறந்ததாகவும் ராஜேஷ் மாமனாா் முருகனுக்கு தகவல் கொடுத்தாா். கெளசல்யாவின் பெற்றோா்கள் வந்து பாா்த்தபோது, அவரின் தலை, முகத்தில் காயம் இருந்தது தெரியவந்தது.
இதில் சந்தேகம் அடைந்த கெளசல்யாவின் தாய் ரேவதி பொன்னேரி காவல் நிலையத்தில் மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக புகாா் செய்தாா்.
தொடா்ந்து போலீஸாா் திருமணமான 5 மாதத்தில் மரணம் அடைந்ததால் கோட்டாட்சியா் விசாரணைக்கு பரிந்துரை செய்தனா். இந்த நிலையில், போலீஸாா் ராஜேஷை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்தனா்.
போலீஸாா் மேற்கொண்ட முதல் கட்ட விசாரணையில் ராஜேஷுக்கும், செங்குன்றம் காந்தி நகரை சோ்ந்த தீபிகாவுக்கும் (21) இடையே தொடா்பு இருந்தது தெரியவந்தது. இதனால் கெளசல்யா கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் ராஜேஷ், தீபிகா ஆகியோரை கைது செய்தனா்.

