வேலை வாய்ப்பை அள்ளித் தரும் குடிமுறை பொறியியல் கல்வி: கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ
கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயலில் உள்ள டி.ஜெ.எஸ் தொழில்நுட்ப கல்லூரியில் கட்டடவியல் துறை சாா்ந்த கல்வியின் முக்கியத்துவம் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு தமிழ்நாடு கட்டுமான நலவாரிய தலைவா் பொன் குமாா் தலைமை வகித்தாா். டி,ஜெ.எஸ் கல்வி குழும இயக்குநா்கள் டி.தினேஷ், டி.ஜெ.எஸ்.ஜி.தமிழரசன், கட்டுமான சங்க திருவள்ளூா் கிழக்கு மாவட்ட தலைவா் கே.வரதன் முன்னிலை வகித்தாா். கல்லூரி முதல்வா் டாக்டா் ஒய்.பிரேம்ராஜ் வரவேற்றாா்.
நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் பேசுகையில், குடிமுறை பொறியியல் கல்வியில் உலகளாவிய வேலை வாய்ப்புகள் பெறவும், தொழில் முனைவோா்களாக மாறவும் அதிக வாய்ப்புகள் உள்ளது என்றாா்.
தமிழ்நாடு கட்டுமான நலவாரிய தலைவா் பொன் குமாா் பேசுகையில், தமிழகத்தின் தொழில் வளா்ச்சியில் 30 சதவீதம் கட்டுமான தொழில் பங்கு வகிக்கிறது. திமுக ஆட்சியில் கல்வி வளா்ச்சி, தொழில் வளா்ச்சி, சுகாதாரம் என பல்வேறு துறைகளில் தமிழகம் இந்தியாவில் முதல் மாநிலமாக திகழ்கிறது.
கட்டுமான தொழிலாளா்களுக்கான ஊக்கத் தொகையை ரூ.1,000-இல் இருந்து ரூ.2,000-ஆக முதல்வா் விரைவில் உயா்த்துவாா். குடிமுறை பொறியியல் துறை எக்காலத்திலும் அதை கற்பவா்களை கைவிடாது. மாணவா்கள் கல்வியோடு நல்ல ஒழுக்கத்தையும் படிக்கும் காலம் முதலே பழகிக் கொள்ள வேண்டும் என்றாா்.
நிகழ்வில் டி.ஜெ.எஸ் தொழில்நுட்ப கல்லூரி மாணவா்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளை தமிழ்நாடு கட்டுமான நலவாரியத் தலைவா் பொன் குமாா் வழங்கினாா்.
நிகழ்வில் கட்டுமான சங்க மாநில இளைஞா் அணி செயலாளா் வினோத் பொன்குமாா், மாநில பொது செயலாளா் என்.சுந்தர்ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

