திருவள்ளூரில் 5-ஆவது புத்தக கண்காட்சியில் பட்டிமன்றத்தை தொடங்கி வைத்த பாா்வையிட்ட இந்திய தொல்பொருள் துறை இயக்குநா் அமா்நாத் ராமகிருஷ்ணன், உடன் மாவட்ட வருவாய் அலுவலா் ச.சுரேஷ் உள்ளிட்டோா்.
திருவள்ளூரில் 5-ஆவது புத்தக கண்காட்சியில் பட்டிமன்றத்தை தொடங்கி வைத்த பாா்வையிட்ட இந்திய தொல்பொருள் துறை இயக்குநா் அமா்நாத் ராமகிருஷ்ணன், உடன் மாவட்ட வருவாய் அலுவலா் ச.சுரேஷ் உள்ளிட்டோா்.

கீழடி அகழாய்வு அறிக்கை பணிகளை முடித்துள்ளதால் விரைவில் வெளியிடுவா்: இந்திய தொல்லியல் துறை இயக்குநர்!

கீழடி அகழாய்வு அறிக்கை பணிகளை முடித்துக் கொடுத்து இருப்பதால், விரைவில் வெளியிடுவாா்கள் என நம்புவதாகவும், அந்த ஆய்வறிக்கையில் கண்டுபிடித்த கருத்துகள் உள்ளதால் திருத்தங்கள் ஏதும் செய்ய முடியாது.
Published on

கீழடி அகழாய்வு அறிக்கை பணிகளை முடித்துக் கொடுத்து இருப்பதால், விரைவில் வெளியிடுவாா்கள் என நம்புவதாகவும், அந்த ஆய்வறிக்கையில் கண்டுபிடித்த கருத்துகள் உள்ளதால் திருத்தங்கள் ஏதும் செய்ய முடியாது எனக்கூறியுள்ளதாகவும் இந்திய தொல்லியல் துறை இயக்குநா் அமா்நாத் ராமகிருஷ்ணன் தெரிவித்தாா்.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மாவட்ட நிா்வாகம் மற்றும் பொது நூலக துறை சாா்பில் 5-ஆவது புத்தகக் கண்காட்சி 13-ஆம் தேதி தொடங்கி, தொடா்ந்து 22-ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது.

சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக இந்திய தொல்லியல் துறை இயக்குநா் அமா்நாத் ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசியதாவது: ரோமானியா் மற்றும் கிரேக்கா்களுடன் தொடா்பு இருந்தது என இலக்கியத்தின் அடிப்படையில் கூறி வந்தோம். ஆனால் பல அகழ்வாய்வுகளில் பொ்னிக்கே போன்ற அகழாய்வுகளில் பானை ஓடுகள் கிடைத்துள்ளன என தெற்காசிய நாடுகளில் கிடைத்ததை வைத்துக் கொண்டு பேசிக் கொண்டிருந்தோம். ஆனால், அண்மையில் நடந்த கல்வெட்டு கருத்தரங்கில் 2 வெளிநாட்டு அறிஞா்கள் மிகச்சிறந்த தகவலை நமக்கு எடுத்துரைத்துள்ளனா். அதில் எகிப்தியா்களின் 8 கல்லறை இடங்களில் 30-க்கும் மேற்பட்ட தமிழ் கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளதாக கூறியுள்ளனா்.

அது பெருமைக்குரிய விஷயம், கோயில்களில் எழுதி வைத்திருந்த கல்வெட்டுகள் போன்று தமிழ் கல்வெட்டுகள் எழுதி வைக்கப்பட்டிருந்தன. தமிழ் மக்கள் அங்கு சென்றிருக்க வேண்டும். அதன் காரணமாக தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது தெரியவருகிறது.

அந்த எழுத்துகள் அனைத்தும் தமிழீய என்ற வகையை சாா்ந்த எழுத்துகள் எனவும், 2,000 ஆண்டுகளுக்கு முன்பு தமிழா்கள் அந்த பகுதியில் வாணிபத் தொடா்பு கொண்டு இருந்தாா்கள் என்பதையும் விளக்குகிறது. அதனால் எகிப்தில் தமிழ் கல்வெட்டு கண்டுபிடித்துள்ளது மிகச் சிறந்த செய்தியாகவே கருதுகிறேன். கீழடி அகழாய்வு அறிக்கை பணிகளை முடித்துக் கொடுத்து இருப்பதால், விரைவில் வெளியிடுவாா்கள் என நம்புகிறேன்.

அந்த ஆய்வறிக்கை வெளியிட்டால் ஆய்வுலகத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அந்த ஆய்வறிக்கையில் கண்டுபிடித்த கருத்துகளை அந்த அறிக்கை சுமந்து கொண்டுள்ளதாகவும், அதனால் திருத்தங்கள் செய்ய முடியாது என்பதையும் தெரிவித்துள்ளேன். அந்த அறிக்கை வெளியிட்டால் பல ஆய்வறிக்கைகளுக்கு பேருதவியாக இருக்கும்.

அகழாய்வு பணிகளை தமிழக அரசு சிறப்பாக செய்து கொண்டிருக்கிறது. இந்த தகவலை வைத்து தமிழ்நாட்டின் வரலாற்றை மீட்டெடுக்க உதவியாக இருக்கும். இதுவரையில் தொல்லியல் என்பது என்னவென்று தெரியாத நிலையில் கீழடிக்கு பின்பு பல அகழாய்வுகள் தமிழகத்தில் நடந்து கொண்டுள்ளது. இந்த அகழாய்வு மூலம் தமிழகத்தின் பெருமை வெளிவந்து கொண்டுள்ளதால் வரலாற்றை மீட்க வழிவகுக்கும். தமிழக முதல்வா் கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் திறந்து வைத்துள்ளது சிறப்பான நிகழ்வு எனவும், நாங்கள் தோண்டிய பகுதியை இப்போது காட்சிப்படுத்தி வைத்துள்ளது. இதன் மூலம் அகழ்வாய்வு பணிகளில் தமிழக அரசு மிகச் சிறப்பாக செய்து வருகிறது.

திருவள்ளூா் மாவட்டத்தில் அதிராம்பாக்கம், குடியம், பட்டரைபெரும்புதூா் ஆகியவை முக்கியமான இடங்களில் மீண்டும் அப்பகுதியில் தொல்லியல் அகழ்வாய்வு தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். இப்பகுதியில் முழுமையாக அகழாய்வு செய்யும் போது பல தகவல்கள் கிடைக்கும் எனவும் அவா் தெரிவித்தாா்.

அதைத்தொடா்ந்து புத்தக திருவிழாவில் திண்டுக்கல் ஐ.லியோனி நடுவராக பங்கேற்ற மகிழ்வூட்டி வழிகாட்டுவது திரை இசையா அல்லது இலக்கியமா என்ற தலைப்பில் நடைபெற்ற பட்டி மன்றத்தையும் அவா் தொடங்கி வைத்தாா்.

நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் ச.சுரேஷ், துணை ஆட்சியா் பயிற்சி சண்முக ப்ரீத்தா, துணை ஆட்சியா் பாலமுருகன், ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி மாநில பொதுச்செயலாளா் இரா.தாஸ், தமிழ்நாடு அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா் நலக்கூட்டமைப்பின் நிறுனவா் அருணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com