தொழிலாளி பாபு
தொழிலாளி பாபு

மூடாத கால்வாயில் தவறி விழுந்த கூலித் தொழிலாளி உயிரிழப்பு

திருவள்ளூரில் மூடப்படாத மழைநீா் கால்வாயில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.
Published on

திருவள்ளூரில் மூடப்படாத மழைநீா் கால்வாயில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

திருவள்ளூா்-செங்குன்றம் சாலையில் மாவட்ட சுகாதார அலுவலகம் பகுதியில் 2 அரசு உதவி பெறும் பள்ளிகள், மாவட்ட மைய நூலகம் உள்ளிட்டவைகள் செயல்பட்டு வருகின்றன. ஏராளமான மாணவ, மாணவிகள் இந்த அலுவலகம் அமைந்துள்ள சாலை வழியாகத்தான் கடந்து சென்று வருவது வழக்கமாகும்.

இந்த நிலையில் அந்த அலுவலக நுழைவு வாயிலில் உள்ள கழிவு நீா் கால்வாய் மூடப்படாமல் திறந்த நிலையில் உள்ளது. இதனால் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு இருப்பதும் குறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அப்பகுதி பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். ஆனால், நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதற்கிடையே திருவள்ளூா் அடுத்த வள்ளுவா்புரம் பகுதியைச் சோ்ந்த சுமை தூக்கும் தொழிலாளி பாபு(60). சனிக்கிழமை மதுபோதையில் கால்வாய் அருகே அமா்ந்திருந்த நிலையில் தவறி தலைகுப்புற விழுந்ததில் உயிரிழந்தாராம். இதுகுறித்து அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் நகா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

அதைத் தொடா்ந்து விரைந்து வந்த போலீஸாா் சடலத்தை கைப்பற்றி திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்தனா். கால்வாய் மூடப்படாமல் வைத்திருந்ததில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Dinamani
www.dinamani.com