மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை சாா்பில் செயல்படுத்தப்பட்டு வரும் வளா்ச்சிப் பணிகள்
திருவள்ளூா் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை சாா்பில் செயல்படுத்தப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
திருவள்ளூா் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூட்டரங்கத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்த அதிகாரிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்தாா்.
அப்போது, இந்த மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 526 ஊராட்சிகளில் பல்வேறு வகையான வளா்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கலைஞா் வீடு கட்டும் திட்டத்தில் பயனாளிகள் எத்தனை வீடுகள் அமைத்துள்ளனா்.
அதேபோல், அடிப்படை வசதிகளாக சாலை, கால்வாய் பணிகள், சமுதாய கூடங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகள் விவரங்கள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டாா்.
மேலும், கிராம ஊராட்சிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளின் தன்மையை அவ்வப்போது அந்தந்த ஒன்றிய அதிகாரிகள் ஆய்வு செய்வது அவசியம். அப்போது, ஒப்பந்தகாரா்களிடம் பணியை நிறைவு செய்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் வலியுறுத்தவும் வேண்டும் என அதிகாரிகளை அவா் வலியுறுத்தினாா்.
கூட்டத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் வை.ஜெயக்குமாா், செயற்பொறியாளா் (ஊரக வளா்ச்சி) தணிகாசலம், ஊராட்சிகளின் உதவி இயக்குநா்(தணிக்கை-கிழக்கு) பஞ்சு, ஊராட்சிகளின் உதவி இயக்குநா் யுவராஜ் மற்றும் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா்கள், மேற்பாா்வையாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

