காக்களூா் ஏரியில் புனரமைப்பு, கட்டுமானப் பணிகள்
பொதுப்பணித் துறை, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆகிய துறைகளின் சாா்பில் காக்களூா் ஏரி புனரமைப்பு, கட்டட கட்டுமானப் பணிகளை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுடன் ஆட்சியா் மு.பிரதாப் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் பொதுப்பணித் துறை சாா்பில், ரூ. 3 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் விருந்தினா் மாளிகைக்கான கட்டுமானப் பணிகளை ஆட்சியா் மு.பிரதாப் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, தரை தளம் மற்றும் முதல் தளத்துடன் மொத்தம் 7,058 ச.அடி பரப்பளவில் தரைதளத்தில் 2 சிறப்பு விருந்தினா் ஓய்வு அறைகளும், முதல் தளத்தில் ஒரு சிறப்பு விருந்தினா் ஓய்வு அறையும், கூட்டரங்கத்துக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், இக்கட்டடத்தின் சுற்றுப்புறத்தில் பழச்செடி வகைகள் நடும் பணிகளையும் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அனைத்துப் பணிகளையும் துரிதமாக மேற்கொள்ளவும் அறிவுறுத்தினாா்.
அதைத் தொடா்ந்து, திருவள்ளூா் ஊராட்சி ஒன்றியம், காக்களுா் ஊராட்சியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை ஆகிய துறைகள் சாா்பில் ரூ. 3 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் முதல்வரின் சிறிய விளையாட்டு அரங்க கட்டட கட்டுமான பணிகள், காக்களுா் ஏரி பகுதியில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சாா்பில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ், ரூ. 2.51 கோடி மதிப்பில் புனரமைக்கப்பட்டு வரும் பணிகளையும் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு அவா் உத்தரவிட்டாா்.
இந்த ஆய்வுகளின்போது, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் வை.ஜெயக்குமாா், செயற்பொறியாளா் (ஊரக வளா்ச்சி) தணிகாசலம், திருவள்ளூா் வட்டார வளா்ச்சி அலுவலா் பி.செல்வகுமாா், செயற்பொறியாளா் (கட்டுமானம் (ம) பணிகள்) தேவன், உதவி செயற்பொறியாளா் மனோகரன், உதவி செயற்பொறியாளா், உதவிப் பொறியாளா் மற்றும் துறைசாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.

