கலைப் பொருள்கள்: வெற்றியை தந்த வெட்டிவேர்!

மணம் வீசும் வெட்டிவேரில் கலைப் பொருள்களைச் செய்து லாபம் ஈட்ட முடியும் என்று இளைஞர்களுக்கு நம்பிக்கையூட்டுகிறார் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பி.இ. இயந்திரவியல் பட்டதாரி க.பிரசன்னகுமார்.
கலைப் பொருள்கள்: வெற்றியை தந்த வெட்டிவேர்!

மணம் வீசும் வெட்டிவேரில் கலைப் பொருள்களைச் செய்து லாபம் ஈட்ட முடியும் என்று இளைஞர்களுக்கு நம்பிக்கையூட்டுகிறார் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பி.இ. இயந்திரவியல் பட்டதாரி க.பிரசன்னகுமார்.
 குள்ளச்சாவடி அருகேயுள்ள சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த இவர் கடலூர் சிட்கோ தொழில்பேட்டையில் "கலாமந்திர்' என்ற பெயரில் வெட்டிவேரைக் கொண்டு தயாரிக்கப்பட்ட கலைப்பொருள்கள், வீட்டு உபயோகப் பொருள்கள், பரிசுப் பொருள்கள், உடைகள் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
 தனியாளாய் இந்தத் தொழிலைத் தொடங்கிய பிரசன்னகுமார், தற்போது 12 நண்பர்கள் உள்பட நூற்றுக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பை அளித்து வருகிறார்.
 புல்வகையைச் சேர்ந்தது வெட்டிவேர். இதன் தமிழ்ப் பெயராலேயே சுமார் 130 நாடுகளிலும் அறியப்படுகிறது. வெட்டிவேர் தொடர்பாக சுமார் 2 ஆயிரம் ஆய்வுக் கட்டுரைகள் வெளியாகியுள்ளன.
 வாசனை, மூலிகைத் திரவியமாகப் பயன்படுத்துவதற்கான மூலப்பொருள் வெட்டிவேர். கரைகளின் அரிப்பைத் தடுக்கும் தன்மை கொண்டது. சுற்றுப்புறத்தை தூய்மைப்படுத்துவது வெட்டிவேரின் சிறப்பம்சம். ஒரு செடி 2.5 கிலோ கரியமில வாயுவை சுத்தம் செய்து பிராண வாயுவாக மாற்றும் சக்திபடைத்தது.
 கடலூரும், வெட்டி வேரும்: அனைத்து இடங்களிலும் வளரும் தன்மை கொண்ட வெட்டி வேரை வணிக நோக்கில் பயிரிட்டு அறுவடை செய்ய கடற்கரையோரம் உள்ள மணல்பாங்கான இடமே சிறந்தது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் பயிரிடப்பட்டாலும், கடலூர் வெட்டிவேர் தரத்தில் முதன்மையானதாகக் கருதப்படுகிறது. கடலூர் மாவட்டத்தில் நொச்சிக்காடு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பில் பயிரிடப்படுகிறது.
 கடந்த ஆண்டில் வெட்டிவேர் பயிரிடும் விவசாயிகளுடன் பிரதமர் மோடி காணொலிக்காட்சியில் கலந்துரையாடி, அதிலிருந்து எண்ணெய் எடுப்பதற்கான இயந்திரத்தையும் அமைத்துக் கொடுத்தார்.
 வெட்டிவேரைக் கொண்டு கலைப் பொருள்களைத் தயாரித்து விற்பனை செய்யும் பிரசன்னகுமார் கூறியதாவது:
 நான் பயின்ற பொறியியல் கல்லூரியின் நிர்வாக இயக்குநர் சி.கே.அசோக்குமார் வெட்டிவேர் குறித்து அடிக்கடி கூறுவார்.
 புதுச்சேரியில் வெட்டிவேர் செருப்பு தயாரித்து விற்பனை செய்யும் இ.வி.ஆனந்த்குமாரை சந்தித்த போது, அவர் தயாரித்த ரூ.300 மதிப்பிலான செருப்பை எனக்குக் கடனாகத் தந்தார். அதை, சிறிது லாபத்தில் விற்றேன்.
 பின்னர், மேலும் சில பொருள்களை விற்பனை செய்து வந்த போது, சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்ற எனக்கு, வெட்டிவேரை வாங்கி தனியார் நிறுவனத்துக்கு வழங்கும் பணி கிடைத்தது.
 அப்போது, எனது நண்பர் த.இன்பரசனைத் தொடர்பு கொண்டேன். அவரும் அதற்கு ஒத்துழைத்தார். இருவரும் சேர்ந்து வெட்டிவேர் வாங்கி அனுப்பி வந்தோம்.
 பின்னர், அந்த நிறுவனமே எங்களை வெட்டிவேர் பொருள்களை உற்பத்தி செய்யுமாறு கூறியது. நண்பர்கள் செ.செந்தூர்வேலன், செ.செந்தூர்குமரன் ஆகியோருடன் சேர்ந்து விவசாயிகளைச் சந்தித்து வெட்டிவேரை கடனுக்கு வாங்கி கைவினைப் பொருள்களைத் தயாரித்து விற்பனை செய்தோம்.
 வெட்டி வேர் சோப்பு, குளிக்கும் போது தேய்க்கப் பயன்படுத்தும் சுருள், தரை விரிப்புகள், ஜன்னல் திரைச்சீலைகள், கலைப்பொருள்கள், ஆடைகள், பைகள், தலையணைகள், செருப்புகள், அலங்காரப் பொருள்கள், மாலைகள் உள்ளிட்டவற்றை உற்பத்தி செய்கிறோம்.
 ஆர்டர் தருபவர்கள் என்ன வேண்டும் என்று கேட்கிறார்களோ அதைச் செய்து கொடுக்கும் நிலையை அடைந்து விட்டோம்.
 வெட்டிவேர் பயிரிடும் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக வேர்களைப் பெற்று, கலைப் பொருள்களை உருவாக்கி மிகக் குறைந்த லாபத்தில் அவற்றை விற்பனை செய்கிறோம்.
 விவசாயிகளால்தான் நாங்கள் என்பதால் லாபத்தை குறிக்கோளாக வைக்கவில்லை. வெட்டிவேர் பொருள்கள் பயன்பாடு என்பது புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டது அல்ல.
 ஏற்கெனவே, நாம் குடிநீரிலும், தலைக்குத் தேய்க்கும் எண்ணையிலும் வெட்டிவேரை நேரடியாகப் பயன்படுத்தி வந்தோம். குளிர்ச்சிக்காகவும் பல்வேறு வடிவங்களில் பயன்படுத்தி வந்தோம்.
 தொழில்முனைவோர்கள் இந்தச் சமூகத்தில் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு இந்தச் சமூகத்தையும் முன்னேற்றுவார்கள். எனது நண்பர்களையும் பங்குதாரர்களாக்கி தொழிலை விரிவடையச் செய்துள்ளேன் என்றார்.
 -ச.முத்துக்குமார்
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com