

இந்தியப் பங்குச் சந்தைகளில் தொடர்ந்து மூன்றாவது வர்த்தக தினமான திங்கள்கிழமையன்றும் வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது.
ரிசர்வ் வங்கி, வெளிநாட்டு வணிக கடனுக்கான கொள்கைகளை மேலும் தளர்த்தியது. அத்துடன் இன்னும் பல துறைகளை அப்பிரிவில் இடம்பெறும் வகையில் ரிசர்வ் வங்கி நடவடிக்கையை மேற்கொண்டது.
ரிசர்வ் வங்கியின் இந்த அதிரடி நடவடிக்கையால், இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளிலிருந்து கடன் பெறுவது மேலும் சுலபமாகும் என்ற நிலைப்பாட்டால் முதலீட்டாளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டனர்.
வட மற்றும் தென் கொரியா அதிபர்களிடையே நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தையின் காரணமாக ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் ஏற்றத்துடன் காணப்பட்டது. அதன் தாக்கம், இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது. பங்குச் சந்தைகளை ஊக்குவிக்கும் விதத்தில் அமைந்திருந்தது.
சிறந்த நிதி நிலை முடிவு மற்றும் டாலர் மதிப்பு வலுப்பெற்று வருவதையடுத்து தகவல் தொழில்நுட்ப துறை பங்குகளுக்கான தேவை சந்தையில் அதிகரித்தது.
மும்பை பங்குச் சந்தையில் ரியல் எஸ்டேட் துறை குறியீட்டெண் 1.50 சதவீதமும், பொறியியல் சாதனங்கள் 1.48 சதவீதமும், தகவல் தொழில்நுட்பத் துறை குறியீட்டெண் 1.44 சதவீதமும் அதிகரித்தன.
யெஸ் வங்கி பங்கின் விலை 3.90 சதவீதமும், ஹிந்துஸ்தான் யுனலீவர் 2.34 சதவீதமும், ஹெச்டிஎஃப்சி பங்கின் விலை 1.44 சதவீதமும் உயர்ந்தன.
மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 190 புள்ளிகள் அதிகரித்து 35,160 புள்ளிகளில் நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 47 புள்ளிகள் உயர்ந்து 10,739 புள்ளிகளில் நிலைத்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.