
கோப்புப்படம்
இந்தியர்கள் ஸ்மார்ட்போனில் செலவழிக்கும் நேரம் சராசரியாக 25 சதவீதம் அதிகரித்துள்ளது என புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது.
ஸ்மார்ட்போன்கள் மனித வாழ்வில் இன்றியமையாத ஒரு மின்னணு கருவியாக மாறிவிட்டன. அந்தவகையில் ஸ்மார்ட்போன் குறித்த ஒரு ஆய்வில் பல தகவல்கள் தெரியவந்துள்ளன.
அதன்படி, ஸ்மார்ட்போன் தங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதாக 66 சதவீத இந்தியர்கள் நம்புகிறார்கள். தொடர்ந்து தாங்கள் ஸ்மார்ட்போனை உபயோகித்தால் மன/உடல் ஆரோக்கியத்தைப் பாதிக்கக்கூடும் என்று 70 சதவீத இந்தியர்கள் கருதுகின்றனர் என்று பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான விவோ தெரிவித்துள்ளது.
'ஸ்மார்ட்போன்கள் மற்றும் மனித உறவுகளில் அவற்றின் தாக்கம் 2020' என்ற தலைப்பில் விவோவுக்காக சைபர் மீடியா ரிசர்ச் (சி.எம்.ஆர்) நடத்திய ஆய்வில், 15-45 வயதுடைய 2,000 பேர் பங்கேற்றனர். கடந்த ஏப்ரலில் இருந்து ஓடிடி (59%), சமூக ஊடகங்கள் (55%) மற்றும் கேமிங் (45 %) என்ற கணக்கில் இந்தியர்கள் ஸ்மார்ட்போன்களுக்காக அதிக நேரம் செலவிடுகின்றனர் என கணக்கிடப்பட்டுள்ளது.
2020ல் கரோனா தொற்றுக்கு மத்தியில் உறவுகளுடன் நம்மை இணைத்தது ஸ்மார்ட்போன்கள்தான் என்று கூறுகிறார் விவோ விளம்பர உத்தி துறை இயக்குநர் நிபுன்மார்யா.
ஆய்வில் கலந்துகொண்டவர்களில் 74 சதவீதம் பேர் அவ்வப்போது தங்கள் மொபைல்போன்களை சுவிட்ச் ஆப் செய்து வைப்பது குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட உதவும் என்று கூறியுள்ளனர். இருப்பினும், 18 சதவீத பயனர்கள் மட்டுமே தங்கள் தொலைபேசிகளை இம்மாதிரி சுவிட்ச் ஆப் செய்துள்ளனர்.
இதற்கிடையில், 79 சதவீத ஸ்மார்ட்போன் பயனர்கள் தங்களது அன்புக்குரியவர்களுடன் தொடர்ந்து இணைந்திருக்க உதவுவதாகக் கூறியுள்ளனர்.
ஸ்மார்ட்போனை அதிகம் பயன்படுத்துவத்தை மற்றவர்கள் சுட்டிக்காட்டுவதாக கிட்டத்தட்ட 88 சதவிகித பயனர்கள் ஒப்புகொண்டுள்ளனர். 46 சதவிகித மக்கள் ஒரு மணி நேர உரையாடலில் குறைந்தது ஐந்து முறையாவது தொலைபேசியை எடுத்துக்கொள்கிறார்கள்.
ஸ்மார்ட்போன்கள் ஒரு தேவையாக உருவெடுத்து, மக்களுக்கு மிகவும் தேவையான நெகிழ்வுத்தன்மையைக் கொடுத்திருந்தாலும், அவற்றின் அதிகப்படியான பயன்பாடு போதைப்பொருளாக மாறியுள்ளது என்பதும் இந்த ஆய்வின் மூலமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.