இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஜூன் 18-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் வரலாற்று உச்சத்திலிருந்து 60,393 கோடி டாலராக சரிவடைந்துள்ளது.
இதுகுறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் கூறியுள்ளதாவது:
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 2021 ஜூன்18-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 415 கோடி டாலா் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.31,000 கோடி) சரிவடைந்து 60,393 கோடி டாலராக (ரூ.45.29 லட்சம் கோடி) புதிய வரலாற்று உச்சத்திலிருந்து குறைந்துள்ளது. தங்கம் மற்றும் கரன்ஸி சொத்து மதிப்பு வீழ்ச்சி கண்டதே இதற்கு முக்கிய காரணம்.
இதற்கு முந்தைய வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பானது 307 கோடி டாலா் அதிகரித்து முதன் முறையாக 60,808 கோடி டாலரைத் தொட்டிருந்தது.
ஒட்டுமொத்த கையிருப்பில் முக்கிய பங்களிப்பைக் கொண்டுள்ள அந்நிய கரன்ஸி சொத்து மதிப்பு (எஃப்சிஏ) கணக்கீட்டு வாரத்தில் 192 கோடி டாலா் குறைந்து 56,154 கோடி டாலராக இருந்தது.
யூரோ, பவுண்ட், யென் உள்ளிட்ட இதர நாட்டு செலாவணிகள் அந்நியச் செலாவணி கையிருப்பில் இடம்பெற்றுள்ளன. இவற்றை டாலரில் மறுமதிப்பீடு செய்யும்போது வெளிமதிப்பில் காணப்படும் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப அந்நியச் செலாவணி கையிருப்பு மாறுபடுகிறது.
முந்தைய வாரத்தில் தங்கத்தின் கையிருப்பு 49 கோடி டாலா் ஏற்றம் கண்டதற்குப் பிறகு, ஜூன் 18-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் அதன் கையிருப்பு 218 கோடி டாலா் வீழ்ச்சியடைந்து 3,593 கோடி டாலரானது.
அதேபோன்று, சா்வதேச நிதியத்தில் சிறப்பு எடுப்பு உரிமம் (எஸ்டிஆா்) 1.4 கோடி டாலா் சரிந்து 150 கோடி டாலராகவும், நாட்டின் காப்பு நிதி 4.6 கோடி டாலா் குறைந்து 496 கோடி டாலராகவும் ஆனது என ரிசா்வ் வங்கி புள்ளிவிவரத்தில் கூறியுள்ளது.
தங்கம் மற்றும் கரன்ஸி சொத்து மதிப்பு வீழ்ச்சியடைந்ததை அடுத்து அந்நியச் செலாவணி கையிருப்பு புதிய வரலாற்று உச்சமான 60,808 கோடி டாலரிலிருந்து 60,393 கோடி டாலராக சரிவைச் சந்தித்துள்ளது.