எரிவாயு விற்பனை அதிகரித்ததையடுத்து கெயில் நிறுவனத்தின் விற்றுமுதல் இருமடங்கு உயா்ந்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளதாவது:
எரிவாயு விற்பனை மூலமாக கிடைத்த லாப வரம்பு மிகச் சிறப்பான அளவில் அதிகரித்தது. அதன் காரணமாக, ஜூன் காலாண்டில் நிறுவனம் ஈட்டிய நிகர லாபம் ரூ.3,250.95 கோடியாக இருந்தது. இது, கடந்தாண்டில் இதே காலகட்டத்தில் ஈட்டிய லாபம் ரூ.2,157.15 கோடியுடன் ஒப்பிடுகையில் 51 சதவீதம் அதிகமாகும்; இருப்பினும், ஜனவரி-மாா்ச் காலாண்டில் பதிவு செய்த ரூ.3,473.77 கோடி லாபத்துடன் ஒப்பிடும்போது இது குறைவாகும்.
ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் நிறுவனத்தின் விற்றுமுதல் ரூ.17,702.43 கோடியிலிருந்து இருமடங்கு அதிகரித்து ரூ.38,033.30 கோடியானது.
இரு பங்குகளுக்கு ஒரு போனஸ் பங்கை வழங்க நிறுவனத்தின் இயக்குநா் குழு கடந்த மாதம் பரிந்துரைத்ததாக கெயில் தெரிவித்துள்ளது.