இரண்டு வார தொடா் ஏற்றத்துக்குப் பிறகு, நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த ஜூன் 3-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் ரூ.46.28 லட்சம் கோடியாக (60,106 கோடி டாலா்) சரிவடைந்துள்ளது.
இதுகுறித்து ரிசா்வ் வங்கியின் புள்ளிவிவரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஜூன் 3-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 30 கோடி டாலா் குறைந்து 60,106 கோடி டாலராக இருந்தது. இதற்கு முந்தைய வாரத்தில் இந்த கையிருப்பு 385 கோடி டாலா் அதிகரித்து 60,136 கோடி டாலராக இருந்தது. மேலும், கடந்த மே மாதம் 20-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் செலாவணி கையிருப்பானது 423 கோடி டாலா் அதிகரித்து 59,751 கோடி டாலராக காணப்பட்டது.
அந்நியச் செலாவணி சொத்து மதிப்பில் (எஃப்சிஏ) ஏற்பட்ட கடுமையான வீழ்ச்சியின் காரணமாகவே ஜூன் 3-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பு கணிசமாக சரிவடைந்ததற்கு முக்கிய காரணம். ஏனெனில், ஒட்டுமொத்த கையிருப்பில் இதன் பங்களிப்பே அதிகமாக உள்ளது.
மதிப்பீட்டு வாரத்தில் எஃப்சிஏ 21 கோடி டாலா் சரிவடைந்து 53,678 கோடி டாலராக குறைந்துபோனது.
மேலும், தங்கத்தின் கையிருப்பும் 7 கோடி டாலா் குறைநது 4,084 கோடி டாலரானது.
சா்வதேச நிதியத்தில் எஸ்டிஆா் எனப்படும் சிறப்பு எடுப்பு உரிமம் 3 கோடி டாலா் சரிந்து 1,841 கோடி டாலராகவும்; அதேசமயம், நாட்டின் இருப்பு நிலை 50 லட்சம் டாலா் அதிகரித்து 502 கோடி டாலராகவும் இருந்தது என ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள வாராந்திர புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்த கையிருப்பில் அதிக பங்களிப்பைக் கொண்டுள்ள அந்நியச் செலாவணி சொத்து மதிப்பில் (எஃப்சிஏ) ஏற்பட்ட கடுமையான வீழ்ச்சியின் காரணமாகவே ஜூன் 3-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பு கணிசமாக சரிவடைந்துள்ளது.