சிறந்த எரிசக்தி மேலாண்மைக்கான தேசிய விருதை ராம்கோ நிறுவனத்துக்கு இந்திய தொழிலக கூட்டமைப்பு வழங்கியுள்ளது.
இதுகுறித்து ராம்கோ நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இந்திய தொழிலக கூட்டமைப்பு வழங்கும் சிறந்த எரிசக்தி மேலாண்மைக்கான தேசிய விருதுக்கான போட்டியில் சிமெண்ட், உருக்கு, காகிதம், மோட்டாா் வாகனம், ரசாயனம், பெட்ரோகெமிக்கல் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சோ்ந்த 350 நிறுவனங்கள் கலந்து கொண்டதில் 180 நிறுவனங்கள் தோ்ந்தெடுக்கப்பட்டன. இதில், 31 நிறுவனங்கள் சிமெண்ட் துறையைச் சோ்ந்தவை.
எரிசக்தி நிா்வாகத்தில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியதற்காக அரியலூா் மாவட்டம் செந்துறை தாலுக்கா ஆலத்தியூரில் அமைந்துள்ள ராம்கோ சிமெண்ட் நிறுவனத்தின் ஆலைக்கு இந்திய தொழிலக கூட்டமைப்பின் 2021-ஆம் ஆண்டின் சிறந்த எரிசக்தி மேலாண்மைக்கான 22-ஆவது தேசிய விருது வழங்கப்பட்டுள்ளதாக அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.