புது தில்லி: ஓஎன்ஜிசி-யிடமிருந்து இந்த ஆண்டு சுமார் ரூ. 5,001 கோடியை மத்திய அரசு ஈவுத் தொகையாக பெற்றுள்ளது.
இந்த நிதியாண்டில் இதுவரை அனைத்து மத்திய பொதுத் துறை நிறுவனங்களிடமிருந்து ஈவுத்தொகையாக ரூ.23,797 கோடியை மத்திய அரசு பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மை துறையின் செயலாளர் துஹின் காந்தா பாண்டே இது குறித்து தெரிவிக்கையில், இந்த ஆண்டு ஓஎன்ஜிசி நிறுவனத்திடமிருந்து சுமார் ரூ.5,001 கோடி ஈவுத்தொகை மத்திய அரசு பெற்றுள்ளது என்று ட்வீட் செய்துள்ளார்.
2020-ல் முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மை துறை அறிவுறுத்தியதன்படி மத்திய பொதுத் துறை நிறுவனங்கள் நிலையான ஈவுத்தொகையைப் பின்பற்றவும், லாபம், ரொக்கம் மற்றும் நிகர மதிப்பு போன்ற காரணிகளைக் கருத்தில் கொண்டு அதிக ஈவுத்தொகையைச் செலுத்த முயலுமாறு அறிவுறுத்தியது.
விதிகளின்படி, மத்திய பொதுத் துறை நிறுவனங்கள் குறைந்தபட்ச வருடாந்திர ஈவுத்தொகையாக வரிக்குப் பிந்தைய லாபத்தில் 30 சதவிகிதம் செலுத்த வேண்டும்.
இந்த நிதியாண்டில் இதுவரை கிடைத்த மொத்த ஈவுத்தொகை ரூ. 23,796.55 கோடி என்று முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மை துறை இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.