இந்தியாவைச் சேர்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனம் வைஃபை மூலம் இயங்கும் வகையிலும் கணக்குகளை நினைவகத்தில் சேமித்துவைத்துக்கொள்ளும் வகையிலும் ஸ்மார்ட் கால்குலேட்டரைக் கண்டுபிடித்துள்ளது.
இந்த கால்குலேட்டர் பெரும்பாலும் வியாபாரிகளுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என இதைக் கண்டறிந்த டூஹேண்ட்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் டூஹேண்ட் எனும் நிறுவனம் கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
பிரவீன் மிஸ்ரா, சத்யம் சாஹு, சண்முக வடிவேல் ஆகிய மூவரும் இணைந்து இந்த நிறுவனத்தைத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், இந்நிறுவனத்தின் இணை நிறுவனரான பிரவீன் மிஸ்ரா,
காய்கறி கடையில் பணிபுரியும் பெண் எல்லா கணக்குகளையும் காகிதத்தில் எழுதி வைத்துக்கொண்டு, பின்னர் கடைசியாக எல்லாவற்றையும் மீண்டும் ஒட்டுமொத்தமாக கணக்கு பார்க்கும் சிரமத்தைக் கண்டுள்ளார்.
அதன் விளைவாக நினைவக திறன் மற்றும் வைஃபை வசதியில் இயங்கும் புதிய ஸ்மார்ட் கால்குலேட்டரைக் கண்டுபிடித்துள்ளார். இந்த கால்குலேட்டரில் 50 லட்சம் கணக்குகளை உள்ளீடாக சேமித்துவைத்துக்கொள்ளலாம். இதனால் மொத்த கணக்கு பார்க்க எளிதாக இருக்கும். கணக்குகளை சேமித்துவைத்துக்கொள்ள 16MB நினைவகம் கொடுக்கப்பட்டுள்ளது. 2,400-mAh திறன் கொண்ட பேட்டரியும், சி-டைப் சார்ஜிங் போர்ட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.
இது பொதுமக்களுக்கு உதவுவதை விட வியாபாரிகளுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என மிஸ்ரா குறிப்பிடுகிறார்.