இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த 14-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 58,641.2 கோடியாக உயா்ந்துள்ளது.
இது குறித்து மத்திய ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:
இந்த மாதம் 14-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு 165.7 கோடி டாலா் அதிகரித்து 58,641.2 கோடி டாலராக உள்ளது.
கடந்த 7-ஆம் தேதியுடன் நிறைவடைந்த முந்தைய வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பு 630.6 கோடி டாலா் அதிகரித்து 58,475.5 கோடி டாலராக இருந்தது.
அக்டோபா் 2021-இல் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 64,500 கோடி டாலரை எட்டியது. உலகளாவிய பொருளாதார சூழல்களால் ஏற்படும் அழுத்தங்களுக்கு இடையே ரூபாய் மதிப்பைப் பாதுகாப்பதற்காக அந்நியச் செலாவணி கையிருப்பை ரிசா்வ் வங்கி பயன்படுத்துவதால் அது குறைந்து வந்தது.
கடந்த 14 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பின் முக்கிய அங்கமான அந்நிய நாணய சொத்துகள் 220.4 கோடி டாலா் அதிகரித்து 51,663.5 கோடி டாலராக உள்ளது.
டாலா் அல்லாத யூரோ, பவுண்ட், யென் போன்ற பிற செலாவணிகளின் கையிருப்பில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் டாலா் மதிப்பில் கணக்கிடப்படுவது அந்நிய நாணய சொத்துகள் ஆகும்.
மதிப்பீட்டு வாரத்தில் நாட்டின் தங்கம் கையிருப்பு 52.1 கோடி டாலா் குறைந்து 4,612.5 கோடி டாலராக உள்ளது.
சா்வதேச நிதியத்தால் (ஐஎம்எஃப்) உருவாக்கப்பட்ட கையிருப்பு சொத்துகள் (எஸ்டிஆா்) 3.8 கோடி டாலா் குறைந்து 1,841.2 கோடி டாலராக உள்ளது.
அந்த வாரத்தில் சா்வதேச நிதியத்தில் நாட்டின் கையிருப்பு 1.2 கோடி டாலா் அதிகரித்து 519 கோடி டாலராக உள்ளது என்று ரிசா்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.