

இந்தியாவில் பருவ மழை காரணமாக கடந்த ஜூலையில் டீசல் விற்பனை குறைந்தாலும், அந்த மாதத்தில் பெட்ரோல் விற்பனை அதிகரித்துள்ளது.
இது குறித்து துறை புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது: நாட்டின் எரிபொருள் தேவையில் ஐந்தில் 2 பங்கை நிறைவு செய்யும் டீசலின் விற்பனை கடந்த ஜூலையில் 61.5 லட்சம் டன்னாக உள்ளது. இது, கடந்த 2022-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் 4.3 சதவீதம் சரிவாகும்.
கடந்த ஜூலை மாதத்தின் முதல் பாதியில் 15 சதவீதம் வீழ்ச்சியைக் கண்ட டீசல் விற்பனை, அடுத்த 15 நாள்களில் வளா்ச்சியைக் கண்டது. இருந்தாலும், ஒட்டுமொத்தமாக ஜூனில் டீசல் விற்பனை சரிவைக் கண்டுள்ளது.
2022-ஆம் ஆண்டின் ஏப்ரல், மே மாதங்களோடு ஒப்பிடுகையில், கடந்த ஏப்ரல், மே மாதங்களில் டீசல் விற்பனை முறையே 6.7 சதவிகிதம் மற்றும் 9.3 சதவிகிதம் உயா்ந்தது.
அந்த மாதங்களில் விவசாய நடவடிக்கைகள் அதிகரித்தது, கோடையின் வெப்பத்தை சமாளிக்க காா்களில் குளிரூட்டிகள் அதிகம் பயன்படுத்தப்பட்டது போன்ற காரணங்களால் டீசலின் விற்பனை அதிகரித்தது.
கடந்த ஜூலையில் டீசலை அதிகம் பயன்படுத்தும் வேளாண்மைத் துறையின் நடவடிக்கைகள் குறைந்தன. மேலும் பருவமழை காரணமாக காா்களில் குளிரூட்டும் சாதனங்களைப் பயன்படுத்துவது குறைந்துபோனது.
மழை காரணமாக போக்குவரத்தும் குறைந்ததால் டீசல் வாகனங்களின் இயக்கம் குறைந்தது. டீசல் விற்பனை குறைந்ததற்கு இவை காரணங்களாக அமைந்தன.
ஜூன் மாதத்தில் விற்பனையான 71.3 லட்சம் டன் டீசலுடன் ஒப்பிடுகையில், கடந்த மாத டீசல் விற்பனை 13.7 சதவீதம் குறைந்துள்ளது.
பெட்ரோல்: கடந்த 2022 ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டின் அதே மாத பெட்ரோல் விற்பனை 3.8 சதவீதம் அதிகரித்து 27.6 லட்சம் டன்னாக உள்ளது. ஜூன் மாதத்தின் முதல் பதினைந்து நாட்களில் அது 10.5 சதவீதம் குறைந்தாலும், மாதத்தின் பிற்பகுதியில் பெட்ரோல் விற்பனை அதிகரித்தது.
முந்தைய ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் கடந்த ஜூலை மாத பெட்ரோல் விற்பனை 4.6 சதவீதம் குறைந்துள்ளது என்று அந்தப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.