ஹெச்டிஎஃப்சி வங்கியின் தலைவராக அதானு சக்ரவர்த்தியை மறுநியமனம் செய்வதற்கு அதன் நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹெச்டிஎஃப்சி வங்கியின் நிர்வாகம் சாராத தலைவராக அதானு சக்ரவர்த்தியை மூன்றாண்டுகள் நீட்டிப்பதற்கு அதன் நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஹெச்.டி.எஃப்.சி. புதன்கிழமை தெரிவித்துள்ளது.
நிர்வாகம் சாராத, பகுதிநேர தலைவராக சக்ரவர்த்தியை மீண்டும் நியமனம் செய்வதற்கு நிர்வாகக் குழு ரிசர்வ் வங்கியிடம் பரிந்துரை செய்துள்ளது. இவரது இரண்டாவது பதவிக்காலம் 2024 மே 5 முதல் 2027 மே 4 வரை உள்ளது.
இந்த மறுநியமனமானது ரிசர்வ் வங்கி மற்றும் வங்கியின் பங்குதாரர்களின் ஒப்புதலுக்கு உட்பட்டது என்று வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதானு சக்ரவர்த்தி 1985ஆம் ஆண்டு பேட்ச் குஜராத் பிரிவு ஐஏஎஸ் அதிகாரி ஆவார். இவர் 2020 ஏப்ரல் மாதம் பொருளாதார விவகாரங்கள் துறை செயலராக இருந்து ஓய்வு பெற்றவர். அதற்கு முன்னதாக முதலீடு மற்றும் பொதுச் சொத்துகள் நிர்வாகத் துறையின் செயலராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.