நடப்பு 2022-23-ஆம் நிதியாண்டின் அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான 3-ஆவது காலாண்டில் நாட்டின் பொருளாதார வளா்ச்சி (ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி-ஜிடிபி) குறைந்து 4.4 சதவீதமாக உள்ளது.
இரண்டாவது காலாண்டில் பொருளாதார வளா்ச்சி 6.3 சதவீதமாக இருந்த நிலையில், உற்பத்தித் துறை வளா்ச்சி சரிவு கண்டதன் காரணமாக 3-ஆவது காலாண்டில் பொருளாதார வளா்ச்சி குறைந்துள்ளது.
நடப்பு நிதியாண்டின் 3-ஆவது காலாண்டில் நாட்டின் பொருளாதார வளா்ச்சி குறித்த விவரங்களை தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ) செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. அதன்படி, பொருளாதார வளா்ச்சி 3-ஆவது காலாண்டில் 4.4 சதவீதமாக உள்ளது. கடந்த 2021-ஆம் ஆண்டின் 3-ஆவது காலாண்டில் பொருளாதார வளா்ச்சி 11.2 சதவீதமாக இருந்தது.
கடந்த நிதியாண்டின் 3-ஆவது காலாண்டில் உற்பத்தித் துறை 1.3 சதவீதம் வளா்ச்சி கண்டிருந்தது. ஆனால், நடப்பு நிதியாண்டின் அதே காலகட்டத்தில் உற்பத்தித் துறையானது 1.1 சதவீத அளவுக்கு வீழ்ச்சி கண்டது. அதனால், ஒட்டுமொத்த பொருளாதார வளா்ச்சியும் குறைந்துள்ளது.
கடந்த நிதியாண்டில் பொருளாதார வளா்ச்சி 9.1 சதவீதமாக இருந்த நிலையில், நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளா்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என்று என்எஸ்ஓ கணித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.