மெட்டா நிறுவனத்தில் ரூ.6.6 கோடி மதிப்பிலான ஆண்டு வருமானம் அளிக்கும் வேலையை ராஜிநாமா செய்துவிட்டு சொந்தத் தொழிலைத் தொடங்கியுள்ளார் இந்தியாவைச் சேர்ந்த இளைஞர்.
மெட்டாவின் முகநூல் நிறுவனத்தில் கவலைகள் அதிகம் இருந்ததால் ராஜிநாமா செய்ததாகக் கூறும் அவர், டாரோ என்ற புத்தாக்க நிறுவனத்தைத் தொடங்கி அதில் முழுமனதுடன் பணிபுரிந்து வருகிறார்.
மெட்டா நிறுவனத்தின் கலிஃபோர்னியாவிலுள்ள முகநூல் (ஃபேஸ்புக்) நிறுவனத்தில் பணிபுரிந்தவர் ராகுல் பாண்டே. இவர் கலிஃபோர்னியாவிலுள்ள ஸ்டான்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் பயின்றார். மென்பொறியாளரான இவர், 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முகநூல் நிறுவனத்தில் பணிக்குத் தேர்வாகியுள்ளார்.
முகநூல் நிறுவனத்தின் பணிச்சூழல், கூடுதலாக கவலைகளையே கொடுத்ததாகவும், ஆரம்பகட்டத்தில் மிகுந்த பதற்றம் இருந்ததாகவும் குறிப்பிடுகிறார்.
மிகக்குறைவான காலத்தில் மாற்று வேலைக்கு மாறுவதில் விருப்பம் இல்லாததால், முகநூல் நிறுவனத்தில் பணியைத் தொடர்ந்துள்ளார். இரண்டாமாண்டு பணி உயர்வு கிடைத்து ஆண்டு வருவாய் ரூ. 2 கோடியாக உயர்ந்தது.
கரோனா காலகட்டத்தில், மெட்டா நிறுவனத்தைத் தாண்டிய பொறியியல் துறை அறிவைப் பெறுவதில் ஆர்வம் செலுத்தியுள்ளார். அதன் விளைவாக 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தனது பணியை ராஜிநாமா செய்துள்ளார்.
அதோடு, மென்பொறியாளர்களுக்கு உதவும் வகையில் டாரோ என்ற புத்தாக்க நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். பணியை ராஜிநாமா செய்யும்போது ஆண்டு வருவாய் ரூ. 6.6 கோடி எனக் குறிப்பிட்ட ராகுல், உலகில் அதிக ஊதியம் பெறும் 1% நபர்களில் தானும் ஒருவர் எனச் சுட்டிக்காட்டினார்.