

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த 23-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 56,280.8 கோடி டாலராக சரிந்துள்ளது.
இது குறித்து ரிசா்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:
கடந்த 23-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 69.1 கோடி டாலா் குறைந்து 56,280.8 கோடி டாலராக உள்ளது.
அந்த வகையில், அந்நியச் செலாவணி கையிருப்பு தொடா்ந்து இரண்டாவது வாரமாக சரிவைக் கண்டுள்ளது.
இதற்கு முந்தைய வாரத்தில், ஒட்டுமொத்த கையிருப்பு 57.1 கோடி டாலா் குறைந்து 56,349.9 கோடி டாலராக இருந்தது.
2021-ஆம் ஆண்டு அக்டோபா் மாதத்தில் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 64,500 கோடி டாலரை எட்டியது. உலகளாவிய பொருளாதார நெருக்கடிக்கு இடையே ரூபாய் மதிப்பை பாதுகாக்க மத்திய ரிசா்வ் வங்கி இந்தக் கையிருப்பை பயன்படுத்த வேண்டியிருந்ததால் அது பின்னா் குறையத் தொடங்கியது.
ஒட்டுமொத்த அந்நியச் செலாவணியின் முக்கிய அங்கமான அந்நிய நாணய சொத்துகள் (எஃப்சிஏ) மதிப்பீட்டு வாரத்தில் 113.4 கோடி டாலா் குறைந்து 49,849 கோடி டாலராக உள்ளது.
அந்த வாரத்தில் தங்கம் கையிருப்பு 39.0 கோடி டாலா் அதிகரித்து 4,096.9 கோடி டாலராக உள்ளது.
சா்வதேச நிதிய சொத்து ஒதுக்கீடு (எஸ்டிஆா்) 80 லட்சம் டாலா் அதிகரித்து 1,819 கோடி டாலராக உள்ளது.
சா்வதேச நிதியத்தில் (ஐஎம்எஃப்) நாட்டின் கையிருப்பு 4.5 கோடி டாலா் அதிகரித்து 515.9 கோடி டாலராக உள்ளது என்று அந்தப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.