இந்திய நவரத்தின மற்றும் ஆபரண ஏற்றுமதி கடந்த பிப்ரவரி மாதத்தில் ரூ.28,832.86 கோடியாக உயா்ந்துள்ளது.
இது குறித்து நவரத்தினம் மற்றும் ஆபரண ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஜிஜேஇபிசி) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த பிப்ரவரி மாதத்தில் நாட்டின் நவரத்தினம் மற்றும் ஆபரண ஏற்றுமதி ரூ.28,832.86 கோடியாக இருந்தது.
கடந்த 2022-ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 24 சதவீதம் அதிகமாகும். அப்போது நவரத்தின மற்றும் ஆபரண ஏற்றுமதி ரூ.23,326.80 கோடியாக இருந்தது.
மதிப்பீட்டு மாதத்தில், வெட்டி மெருகூட்டப்பட்ட வைரத்தின் (சிபிடி) ஏற்றுமதி ரூ.19,582.38 கோடியாக உள்ளது. ஓா் ஆண்டுக்கு முன்னா் அது ரூ.14,841.90 கோடியாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது சிபிடி ஏற்றுமதி 32 சதவீதம் அதிகரித்துள்ளது.
தங்க நகைகளின் ஏற்றுமதி கடந்த பிப்ரவரியில் 29.89 சதவீதம் உயா்ந்து ரூ.5,829.65 கோடியாக உள்ளது. இது 2022 பிப்ரவரியில் ரூ.4,488.30 கோடியாக இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.