பிரிட்டன், ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து நாடுகளில் தனது சேவையை நிறுத்தவுள்ளதாக ஓலா டாக்ஸி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் விரிவுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் உள்நாட்டு வணிகத்தில் நிறுவனம் கவனம் செலுத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், “பயணச் சேவை வழங்கும் எங்களின் வணிகம் இந்தியாவில் செழித்துள்ளது. இலாபத்தையும் அதே நேரத்தில் இந்த சேவையில் முன்னணியிலும் இருக்கிறோம். எதிர்காலம் மின்சார வாகனங்களை மையம் கொண்டிப்பதால் இந்தியாவில் வளர்ச்சிக்கான மகத்தான வாய்ப்புகளை பார்க்கிறோம்” என தெரிவித்தார்.
2018-ல் வெளிநாடுகளில் ஓலா தனது சேவையைத் தொடங்கியது. ஆஸ்திரேலியாவில் ஏப்ரல் 12-ம் தேதி முதல் சேவையை நிறுத்துவதாக தனது பயனர்களுக்கு அறிவித்துள்ளது.
ஓலாவின் தலைமை நிறுவனமான ஏஎன்ஐ டெக்னாலஜீஸ், 2023 நிதியாண்டில் ஓலா நிறுவனம் ரூ.772.25 கோடி நிகர நட்டம் அடைந்துள்ளதாக அறிவித்துள்ளது. 2022-ல் ஏற்பட்ட ரூ.1,522.33 கோடி நட்டத்தை ஒப்பிடும்போது இது குறைவானதே.
அதே வேளையில் ஏஎன்ஐ நிறுவனத்தின் வணிக செயல்பாடுகள் மூலம் ஈட்டிய மொத்த வருவாய்- 58 சதவிகிதம் அதிகரித்து ரூ.2,135 கோடியாகவும் ஒட்டுமொத்த நட்டம்- 65 சதவிகிதம் குறைந்து ரூ.1,082 கோடியாகவும் உள்ளதாக ஏஎன்ஐ தெரிவித்துள்ளது.
அதிகரித்துவரும் போட்டி, மின்வாகனங்களுக்கு மாற வலியுறுத்தும் வெளிநாட்டு அரசு கொள்கைகள், ஓலாவின் இந்திய சந்தையை விரிவுபடுத்தும் திட்டம் ஆகிய காரணங்களால் இந்தச் சேவை நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.