புது தில்லி: இந்தியாவில் கடந்த ஜனவரி மாதத்தில் பல லட்சம் பேர் புதிய இருசக்கர வாகனங்களை வாங்கி, வாகன விற்பனையை புதிய உச்சத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
அதாவது, 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மட்டும் 14 லட்சத்து 90 ஆயிரம் இருசக்கர வாகனங்கள் விற்பனையாகியிருக்கிறது. இதுவே, கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 11 லட்சத்து 80 ஆயிரம் வாகனங்கள் விற்பனையாகியிருந்ததாக இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் சங்கம் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 26 சதவீதம் அதிகமாகும்.
இந்த அறிக்கையின்படி, கடந்த ஜனவரி மாதம் மட்டும் 3,93,074 தனிநபர் வாகனங்கள் விற்பனையாகியிருக்கிறது. இதுவே கடந்த ஜனவரியில் 3,46,080 ஆக இருந்தது. கடந்த ஆண்டைக் காட்டிலும் இது 14 சதவீதம் அதிகம்.
அதுபோல, மூன்று சக்கர வாகனங்கள் 53,537 விற்பனையாகியிருக்கிறது. கடந்த ஆண்டு இது 48 ஆயிரமாக இருந்துள்ளது.
கடந்த காலங்களில் வாகன விற்பனையில் கடும் மந்தம் இருந்து வந்தநிலையில் தற்போது மெல்ல வாகனச் சந்தை சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது.