எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனத்துடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என வோடஃபோன் ஐடியா நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனத்துடன் பங்கு விற்பனை தொடர்பாக எந்த வித பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என வோடஃபோன் ஐடியா நிறுவனம் செவ்வாய்க்கிழமை விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து வோடஃபோன் நிறுவனம் கூறியதாவது, "குறிப்பிட்ட நிறுவனத்துடன் பங்கு விற்பனை தொடர்பாக எந்தவித பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம். எதன் அடிப்படையில் இவ்வாறு ஒரு செய்தி பரவியது என்று தெரியவில்லை.” என்று தெரிவித்துள்ளது.
மேலும், “செபி பட்டியலிடுதல் விதிமுறைகளுக்கு எங்களது நிறுவனம் இணங்கும் என்பதையும், தேவையான தகவல்களை பங்குச் சந்தைகளுக்கு முறையாகத் தெரிவிக்கும் என்பதையும் நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.” என்று கூறியுள்ளது.
முன்னதாக, வோடஃபோன் ஐடியாவில் அரசாங்கம் வைத்துள்ள 33 சதவீத பங்குகளை எலான் மஸ்க்கிற்கு விற்கலாம் என்று தகவல் வெளியானது.
பங்கு விற்பனை பற்றிய செய்தி வெளியானதில் இருந்து, இந்த நிறுவனத்தின் பங்குகள் 20 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளன. கடந்த 12 மாதங்களில் இந்நிறுவனத்தின் பங்குகள் ரூ.8ல் இருந்து ரூ.16 ஆக இருமடங்காக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.