
தேர்தலின் இறுதிக்கட்டத்துக்கான பிரசாரம் முடிவடைந்ததையடுத்து, பங்குச் சந்தை முதலீட்டாளர்கள், பொதுத்துறை நிறுவன பங்குகள் மீது ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பாஜக கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை தக்க வைத்து கொண்டால் பல பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் குறிப்பிடத்தக்க லாபத்தை ஈட்டும் என்று சந்தை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
பொதுத்துறை நிறுவன பங்குகளின் ஏற்றம்
பொதுத்துறை நிறுவன பங்குகள் அடிப்படையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்பது ரகசியமல்ல. கடந்த நான்கு ஆண்டுகளில், 52 வார மும்பை பங்குச் சந்தை வர்த்தகத்தில் பொதுத்துறை நிறுவனத்தின் பங்குகளின் சந்தை மூலதனம் கிட்டத்தட்ட ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது.
ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட், கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட், இந்துஸ்தான் காப்பர் லிமிடெட், இந்தியன் வங்கி, பாரத் டைனமிக்ஸ் லிமிடெட், பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் மற்றும் ஹவுசிங் & அர்பன் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆகிய எட்டு பொதுத்துறை நிறுவன பங்குகள் சுமார் 1,000 சதவிகிதம் முதல் 2,150 சதவிகிதம் வரை வருமானத்தை அள்ளி வழங்கியுள்ளது.
குறைந்த செயல்திறன் கொண்ட பங்குகளான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் கூட இந்த காலகட்டத்தில் 82 சதவிகிதம் வருமானத்தை வழங்கியுள்ளது. மக்களவைத் தேர்தல்களில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை தக்க வைத்துக் கொண்டால் பொதுத்துறை நிறுவன பங்குகள் தொடர்ந்து வருமானத்தை ஈட்டும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
இருப்பினும், தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மையைப் பெறத் தவறியது போன்ற எதிர்பாராத விளைவு ஏற்பட்டால், இந்த பங்குகளின் செயல்திறன் குறையலாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
பொதுத் தேர்தலும் பொதுத்துறை நிறுவன பங்குகளின் தலைவிதியும்!
சாய்ஸ் வெல்த்தின் துணைத் தலைவர் நிகுஞ்ச் சராஃப், இது குறித்து தெரிவிக்கையில், பொதுத்துறை நிறுவனங்கள் இந்தியப் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளன. அவற்றை பெரும்பாலும் அரசாங்கக் கொள்கைகள் மற்றும் உத்தரவுகளுடன் பிணைக்கப்பட்டுள்ளது.
பொதுத்துறை நிறுவனங்களுக்கு சாதகமான கொள்கைகள் வகுக்கப்படுவதால், இந்த பங்குகளில் முதலீடு செய்வது நன்மை பயக்கும். உதாரணமாக, பாதுகாப்புத் துறையில், பாஜக அரசு தேசிய பாதுகாப்பின் முக்கியத்துவம், பாதுகாப்பு செலவினங்களை அதிகரித்தல், நவீனமயமாக்கல் முயற்சிகள் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தியை ஊக்குவித்தல் ஆகியவற்றை எடுத்துரைத்துள்ளது.
இந்த நடவடிக்கையானது பாதுகாப்புத் துறையில் செயல்படும் நிறுவனங்களுக்கு அதிக பட்ஜெட்டுகள் மற்றும் உற்பத்திக்கான சலுகைகள் மூலம் பயன்பெறும் வகையில் அமையும்.
இருப்பினும், பாஜக பெரும்பான்மையை இழந்து, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுடன் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டால், பல பொதுத்துறை நிறுவனங்கள், தொழில்துறைகள் மற்றும் உள்கட்டமைப்பு ஆகிய உள்நாட்டு சார்ந்த துறைகளில் பங்குகள் கணிசமாக விற்பனையை காணும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.