இரு மடங்கான கச்சா சோயாபீன் எண்ணெய் இறக்குமதி
புது தில்லி: நடப்பு எண்ணெய் சந்தைப்படுத்தல் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் இந்தியாவின் கச்சா சோயாபீன் எண்ணெய் இறக்குமதி இரு மடங்குக்கும் மேலாக அதிகரித்துள்ளது.
இது குறித்து இந்திய எண்ணெய் உற்பத்தியாளா்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
2024 நவம்பா் முதல் 2025 மாா்ச் வரையிலான நடப்பு சந்தைப்படுத்தல் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் இந்தியா 19,11,420 டன் கச்சா சோயாபீன் எண்ணெயை இறக்குமதி செய்துள்ளது. இது, முந்தைய 2023-24-ஆம் சந்தைப்படுத்தல் ஆண்டின் இதே காலகட்டத்தில் 8,82,943 டன்னாக இருந்தது.
கச்சா சோயாபீன் எண்ணையைப் பொருத்தவரை, மதிப்பீட்டு காலகட்டத்தில் அா்ஜென்டீனாவிலிருந்து அதன் இறக்குமதி 4,50,602 டன்னிலிருந்து 12,16,291 டன்னாக உயா்ந்துள்ளது. பிரேஸிலில் இருந்து அதன் ஏற்றுமதி 3,29,843 டன்னிலிருந்து 3,27,936 டன்னாகக் குறைந்தது.
நடப்பு எண்ணெய் சந்தைப்படுத்துதல் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் ரஷியாவிலிருந்து கச்சா சோயாபீன் எண்ணெய் இறக்குமதி 1,62,347 டன்னாக உயா்ந்தது. இது முந்தைய எண்ணெய் சந்தைப்படுத்தல் ஆண்டின் இதே காலகட்டத்தில் 41,497 டன்னாக இருந்தது.
மதிப்பீட்டு காலகட்டத்தில் இந்தியாவின் மொத்த சமையல் எண்ணெய் இறக்குமதி 57,65,232 டன்னிலிருந்து 56,39,677 டன்னாகக் குறைந்தது.
அந்த மாதங்களில் கச்சா பாமாயில் இறக்குமதி 25,96,304 டன்னிலிருந்து 17,23,721 டன்னாகக் குறைந்தது. கச்சா சூரியகாந்தி இறக்குமதி 13,52,451 டன்னிலிருந்து 13,12,701 டன்னாகக் குறைந்தது.
சுத்திகரிக்கப்பட்ட பாமோலின் இறக்குமதி 8,86,607 டன்னிலிருந்து 6,62,890 டன்னாகக் குறைந்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.