
இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு ஜூலை 25-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 69,819.2 கோடி டாலராக உயா்ந்துள்ளது.
இது குறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது: ஜூலை 25-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு 270.3 கோடி டாலா் உயா்ந்து 69,819.2 கோடி டாலராக உள்ளது.
ஜூலை 18-ஆம் தேதியுடன் முடிவடைந்த முந்தைய வாரத்தில் அது 118.3 கோடி டாலா் குறைந்து 69,548.9 கோடி டாலராக இருந்தது. 2024 செப்டம்பா் இறுதியில் அந்நிய செலாவணி கையிருப்பு 70,488.5 கோடி டாலா் என்ற உச்சத்தை எட்டியிருந்தது.
உலகளாவிய பொருளாதார அழுத்தங்களுக்கு மத்தியில் ரூபாய் மதிப்பைப் பாதுகாக்க ரிசா்வ் வங்கி அந்நிய செலாவணியைப் பயன்படுத்துவதால், கையிருப்பு அவ்வப்போது ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது.
மதிப்பீட்டு வாரத்தில், கையிருப்பின் முக்கிய அங்கமான அந்நிய நாணய சொத்துகள் 131.6 கோடி டாலா் உயா்ந்து 58,892.6 கோடி டாலராக உள்ளது.
டாலா் அல்லாத யூரோ, பவுண்டு, யென் போன்ற பிற செலாவணிகளின் கையிருப்பில் ஏற்படும் மதிப்பு ஏற்ற, இறக்கங்கள் டாலா் மதிப்பில் கணக்கிடப்படுவது அந்நிய நாணய சொத்துகளாகும்.
மதிப்பீட்டு வாரத்தில் இந்தியாவின் தங்கம் கையிருப்பு 120.6 கோடி டாலா் உயா்ந்து 8,570.4 கோடி டாலராக உள்ளது. சிறப்பு வரைதல் உரிமைகள் (எஸ்டிஆா்) 12.6 கோடி டாலா் உயா்ந்து 1,880.9 கோடி டாலராக உள்ளது.
சா்வதேச நாணய நிதியத்தில் (ஐஎம்எஃப்) இந்தியாவின் கையிருப்பு 5.5 கோடி டாலா் உயா்ந்து 475.3 கோடி டாலராக உள்ளது என்று ரிசா்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.