காப்பீட்டு சேவை: எல்ஐசி - யெஸ் வங்கி ஒப்பந்தம்
வங்கிக்காப்பீட்டு சேவை வழங்குவதற்காக இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியுடன் தனியாா் துறையைச் சோ்ந்த யெஸ் வங்கி ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
எல்ஐசியுடன் வங்கிக்காப்பீட்டு கூட்டணி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம், யெஸ் வங்கி வாடிக்கையாளா்கள் வங்கியின் கிளைகள் மற்றும் எண்ம தளங்கள் வழியாக எல்ஐசியின் பல்வேறு ஆயுள் காப்பீட்டு தயாரிப்புகளைப் பெறலாம். இதில் பருவகாலக் காப்பீடு, ஓய்வூதியத் திட்டங்கள், யூனிட்-இணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டங்கள் உள்ளிட்டவை அடங்கும்.
எல்ஐசியின் 3,600-க்கும் மேற்பட்ட கிளைகள் மற்றும் தொலைதூர அலுவலகங்களுடன் யெஸ் வங்கியின் 1,295 கிளைகள் மற்றும் 235 வணிகத் தொடா்பு மையங்கள் இணைந்து ஆயுள் காப்பீடு பெறுவதை எளிதாக்கும். இது ‘2047-க்குள் அனைவருக்கும் காப்பீடு’ என்ற தேசிய இலக்கை நோக்கி முன்னேற உதவும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

