

2025 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் நாட்டின் கையடக்கக் கணினி (டேப்லெட்) ஏற்றுமதி சந்தை 20 சதவிகிதம் வரை சரிந்துள்ளது.
இந்த காலகட்டத்தில் 1.33 மில்லியன் கையடக்கக் கணினிகள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பாக சர்வதேச தரவுக் கழகம் வழங்கியுள்ள அறிக்கையில், சாதாரண கையடக்கக் கணினி மற்றும் வணிக கையடக்கக் கணினிக்கான தேவை குறைந்துள்ளதே இந்த சரிவுக்கு காரணம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கையடக்கக் கணினியின் ஒட்டுமொத்த ஏற்றுமதி சரிந்துள்ளதே தவிர, நுகர்வோர் பிரிவில் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டில், 13.5 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
இவை பெரும்பாலும் விழாக் கால சலுகைகள், கேஷ்பேக் மற்றும் பல்வேறு விதமான சலுகை விளம்பரங்களின் மூலம் கிடைத்துள்ளன.
இத்துடன் இணைய விற்பனை தளங்களும் முக்கியப் பங்காற்றுகின்றன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 53.9 சதவிகித விற்பனை இணையத்தில் நடந்துள்ளது.
குறிப்பாக தட்டச்சு கருவியில் இருந்து தனியாக எடுத்து பேனா மூலம் பயன்படுத்தும் வகையிலான கையடக்கக் கணினியின் பயன்பாட்டை மக்கள் சமீபகாலமாக அதிகம் விரும்புவதாகவும், இவை அனைத்துமே நுகர்வோர் பிரிவில் விற்பனை அதிகரித்ததற்கான காரணம் எனவும் சர்வதேச தரவுக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு நேர்மாறாக கல்வித் துறையில் வணிக கையடக்கக் கணினியின் பயன்பாடு 53 சதவிகிதமாக சரிந்துள்ளது. பள்ளி பயன்பாட்டிற்காக வாங்கப்படும் கையடக்கக் கணினியும் 61.9 சதவிகிதம் சரிந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.