

மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவில் ரூ.91.01-ஆக செவ்வாய்க்கிழமை சரிவடைந்தது.
இந்தியா-அமெரிக்கா இடையேயான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் இறுதியாவதில் இழுபறி நீடிப்பதே இதற்கு காரணம் என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் விளக்கமளித்தது.
கடந்த சில நாள்களாக டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.90-ஆக சரிவடைந்த நிலையில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு செவ்வாய்க்கிழமை ரூ.91-ஆக கடும் வீழ்ச்சியடைந்தது.
இந்த விவகாரத்தை மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் எழுப்பின. இதற்கு பதிலளித்து மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் செளதரி பேசியதாவது: நிகழ் நிதியாண்டில் வர்த்தக பற்றாக்குறை, இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்த இழுபறி உள்பட சர்வதேச புவிஅரசியல் காரணங்களால் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருகிறது.
ஒருபுறம் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் ஏற்றுமதித் துறையில் போட்டி அதிகரித்து பொருளாதார வளர்ச்சிக்கு பலனளிக்கும். மறுபுறம் இறக்குமதி செய்யப்படும் பொருள்களின் விலை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. இருப்பினும், சர்வதேச சந்தை விலையை பொறுத்தே உள்நாட்டுச் சந்தையில் விலை நிர்ணயிக்கப்படும்.
5.1 சதவிகிதம் சரிவு:
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2015-இல் 4.5 சதவிகிதம், 2016-இல் 2.6 சதவிகிதம், 2017-இல் 6.4 சதவிகிதம், 2018-இல் 8.5 சதவிகிதம், 2019-இல் 2.3 சதவிகிதம், 2020-இல் 2.3 சதவிகிதம், 2021-இல் 1.7 சதவிகிதம், 2022-இல் 10.2 சதவிகிதம், 2023-இல் 0.6 சதவிகிதம், 2024-இல் 2.8 சதவிகிதம் மற்றும் 2025, டிசம்பர் 3-ஆம் தேதி வரை 5.1 சதவீதமும் வீழ்ச்சியடைந்துள்ளது.
சந்தை அடிப்படையிலேயே ரூபாய் மதிப்பு தீர்மானிக்கப்படுகிறது. இதில் அந்நிய செலாவணி சந்தையை தொடர்ந்து கண்காணித்து தேவைப்படும் சமயத்தில் ரிசர்வ் வங்கி தலையிடுகிறது என்றார்.
இந்த மாதத்தின் இறுதிக்குள் ரூபாய் மதிப்பு ரூ.92 வரை வீழ்ச்சியடைய வாய்ப்புள்ளதாக பங்குச் சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.