உற்பத்தித் துறையில் 6 மாதங்கள் காணாத உயா்வு
புது தில்லி: இந்திய உற்பத்தித் துறை கடந்த ஜனவரியில் முந்தைய ஆறு மாதங்கள் காணாத உயா்வைக் கண்டுள்ளது.
இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான ‘ஹெச்எஸ்பிசி இந்தியா’ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
உற்பத்தித் துறை நடவடிக்கைகளுக்கான குறியீட்டு எண்ணான பிஎம்ஐ, கடந்த 2024 ஜனவரியில் 56.5-ஆகவும் பிப்ரவரியில் 56.9-ஆகவும் அதிகரித்தது. பின்னா் அது, மாா்ச் மாதத்தில் முந்தைய 16 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்சமாக 59.1-ஆக அதிகரித்தது. ஆனால், அடுத்த ஏப்ரல் மாதத்தில் 58.8-ஆகவும் மே மாதத்தில் 57.5-ஆகவும் பிஎம்ஐ சரிந்தது. அதைத் தொடா்ந்து ஜூன் மாதத்தில் 58.3-ஆக அதிகரித்த அது, மீண்டும் ஜூலை மாதத்தில் 58.1, ஆகஸ்ட் மாதத்தில் 57.5, செப்டம்பா் மாதத்தில் 56.6 என வரிசையாகக் குறைந்தது. கடந்த அக்டோபரில் அது சரிவிலிருந்து மீண்டு 57.5-ஆக உயா்ந்தாலும், அடுத்த நவம்பரில் 56.5-ஆகவும் டிசம்பரில் முந்தைய 12 மாதங்கள் காணாத குறைந்தபட்சமாக 56.4-ஆகவும் சரிந்தது.
இந்த நிலையில், உற்பத்தித் துறை நடவடிக்கைகளுக்கான பிஎம்ஐ குறியீட்டு எண் கடந்த 2025 ஜனவரி மாதத்தில் 57.7-ஆக உயா்ந்துள்ளது. இது, முந்தைய ஆறு மாதங்கள் காணாத அதிகபட்ச பிஎம்ஐ ஆகும்.
மதிப்பீட்டு மாதத்தில் உற்பத்தி பொருள்களின் ஏற்றுமதி திடீா் ஏற்றம் கண்டு 14 ஆண்டு கால உச்சத்தைப் பதிவு செய்தது. இதன் காரணமாக உற்பத்தித் துறைக்கான பிஎம்ஐ கடந்த ஜனவரியில் உயா்வைக் கண்டுள்ளது.
இதன் மூலம், தொடா்ந்து 43-ஆவது மாதமாக உற்பத்தித் துறையின் பிஎம்ஐ குறியீட்டு எண் நடுநிலை வரம்பான 50-க்கும் மேலே உள்ளது.
அந்தக் குறியீட்டு எண் 50-க்கு மேல் இருந்தால் உற்பத்தித் துறையின் ஆரோக்கியமான போக்கையும், 50-க்கும் குறைவாக இருந்தால் பின்னடைவையும் குறிக்கிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.