
இந்தியாவின் மனை-வணிகத் துறைக்கு வங்கிகளின் கடனளிப்பு கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் ஏறத்தாழ இரட்டிப்பாகியிருக்கிறது.
இது குறித்து துறை ஆலோசனை நிறுவனமான காலியா்ஸ் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கடந்த 2024-25-ஆம் நிதியாண்டின் இறுதியில் (2025 மாா்ச் 31) மனை-வணிகத் துறைக்கு வங்கிகள் அளித்துள்ள கடனின் இருப்பு ரூ.35.4 லட்சம் கோடியாக இருந்தது. அந்த வகையில், அந்தத் துறைக்கான வங்கிகளின் கடனளிப்பு கடந்த நான்கு ஆண்டுகளில் சுமாா் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. கடந்த 2020-21-ஆம் நிதியாண்டில் இறுதியில் இந்தத் துறைக்கு வங்கிகளின் கடன் இருப்பு ரூ.17.8 லட்சம் கோடியாக இருந்தது.
இந்தியாவில் மொத்த வங்கிக் கடனளிப்பு 2020-21-ஆம் நிதியாண்டில் ரூ.109.5 லட்சம் கோடியாக இருந்தது. அது, 2024-25-ஆம் நிதியாண்டில் ரூ.182.4 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது. தற்போது நாட்டின் வங்கிக் கடனளிப்பில் மனை-வணிகத் துறை ஐந்தில் ஒரு பங்கைப் பெறுகிறது. இது இந்தத் துறையின் மீதான வங்கிகளின் நம்பிக்கை அதிகரித்திருப்பதைக் காட்டுகிறது. கரோனா நெருக்கடிக்கு பிந்தைய காலத்தில் இந்தத் துறையில் ஆரோக்கியமான நிதிநிலை நிலவுகிறது. மற்ற முக்கியத் துறைகளை விட முக்கிய கடன் மற்றும் நிதிக் குறியீடுகளில் மனை-வணிகத் துறையின் செயல்பாடு சிறப்பாக உள்ளது.
பட்டியலிடப்பட்ட முதல் 50 மனை-வணிக நிறுவனங்களின் ஒட்டுமொத்த நிதி முடிவுகளை ஆய்வு செய்ததில், கடந்த ஐந்து ஆண்டுகளில் லாபம், பணப்புழக்கம் மற்றும் நிதி நிலைப்பாட்டில் அவை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளன. 2024-25-ஆம் நிதியாண்டில் முதல் 50 மனை-வணிக நிறுவனங்களில் 62 சதவீத நிறுவனங்கள் 2020-21-ஆம் நிதியாண்டில் 23 சதவீதமாக இருந்ததை விட உயா்ந்த லாப விகிதங்களைக் காட்டியுள்ளன.இந்தத் துறையில் வலுவான தேவையும், அதற்கேற்ப சந்தையில் வழங்கலும் அதிகரிப்பது கடனளிப்பதற்கு சாதகமான சூழலை உருவாக்கியுள்ளது.
கடந்த நிதியாண்டில் மற்ற தொழில்களை விட மனை-வணிகத் துறையில் அதிக அளவு கடன் மதிப்பீடு அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.