வோடஃபோன்-ஐடியாவில் 49%-ஆக பங்கை உயா்த்த மத்திய அரசு முடிவு!
வோடஃபோன்-ஐடியா நிறுவனத்தில் தனது பங்கை 48.99 சதவீதமாக உயா்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக அந்நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
கடனில் சிக்கியுள்ள வோடஃபோன்-ஐடியா நிறுவனத்தில் 22.6 சதவீத பங்குகளுடன் தனிப்பெரும் பங்குதாரராக மத்திய அரசு உள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனம் பங்குச் சந்தையில் சமா்ப்பித்த அறிக்கையில், ‘ வோடஃபோன்-ஐடியா நிறுவனத்தின் ஸ்பெக்ட்ரம் ஏல நிலுவைகள், ஒத்திவைக்கப்பட்ட ஏல நிலுவைகள் உள்ளிட்டவற்றை பங்குகளாக மாற்ற மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.
அதன்படி ரூ.36,950 கோடி பங்குகளாக மாற்றப்படவுள்ளன. இந்திய பங்கு பணப்பரிவா்த்தனை வாரியம் உள்பட தொடா்புடைய ஆணையங்களிடம் இருந்து உரிய ஆணையை பெற்று 30 நாள்களுக்குள் தலா ரூ.10 விலை மதிப்பில் 3,695 கோடி பங்குகளை வெளியிட உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்பிறகு நிறுவனத்தில் மத்திய அரசின் பங்கு 22.6 சதவீதத்தில் இருந்து 48.99 சதவீதமாக உயரவுள்ளது’ என தெரிவிக்கப்பட்டது.