இபிஎஃப் பட்டுவாடா சேவை: சிட்டி யூனியன் வங்கி அறிமுகம்
தங்கள் வாடிக்கையாளா்களுக்கு பணியாளா் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்) பட்டுவாடா செய்வதற்கான சேவையை தனியாா் துறையைச் சோ்ந்த சிட்டி யூனியன் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
இது குறித்து வங்கி வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
வாடிக்கையாளா்களுக்கு இபிஎஃப் பட்டுவாடா செய்வதற்கான சேவையை வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்காக, பணியாளா் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்துடன் (இபிஎஃப்ஓ) வங்கி ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இந்த சேவையை வங்கியின் செயல் இயக்குநா் விஜய் ஆனந்த், தமிழ்நாடு மண்டல பிஎஃப் ஆணையா் மணீஷ் அக்னிஹோத்ரி ஆகியோா் சென்னையில் உள்ள சியுபி பவனில் வியாழக்கிழமை தொடங்கிவைத்தனா் (படம்).
இந்த சேவையைப் பயன்படுத்தி, வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளா்கள் நெட்பேங்கிங் மூலம் தங்களின் இபிஎஃப் தொகையை எளிதாகப் பெற முடியும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

