4.3% வளா்ச்சி கண்ட இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை
2025-ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் (ஜூலை-செப்டம்பா்) இந்திய சந்தையில் அறிதிறன் பேசிகளின் (ஸ்மாா்ட்போன்) விற்பனை எண்ணிக்கையின் அடிப்படையில் 4.3 சதவீதம் வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான ஐடிசி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான நடப்பாண்டின் மூன்றாவது காலாண்டில் ஒட்டுமொத்த அறிதிறன் பேசிகளின் விற்பனை 4.8 கோடியாக இருந்தது. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதங்களைவிட இது 4.3 சதவீதம் அதிகம்.
மதிப்பீட்டுக் காலாண்டில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போன் விற்பனை 25.6 சதவீதம் அதிகரித்து, 10.4 சதவீத சந்தைப் பங்கைப் பெற்றுத் தந்தது.
மதிப்பீட்டு மாதத்தில் இந்திய அறிதிறன் பேசிச் சந்தையில் 18.3 சதவீத சந்தைப் பங்குடன் விவோ முதலிடம் வகிக்கிறது. ஓப்போ 13.9 சதவீதத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. சாம்சங் 12.6 சதவீதத்துடன் மூன்றாவது இடத்திலும், ரியல்மி 9.8 சதவீதத்துடன் நான்காவது இடத்திலும், ஷாவ்மி 9.2 சதவீதத்துடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளன. ஒன்பிளஸ் நிறுவனம் 30.5 சதவீத விற்பனை சரிவைச் சந்தித்தது.
இந்திய அறிதிறன் பேசிச் சந்தை 2025-ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் கடந்த ஐந்தாண்டுகள் காணாத மிகச் சிறந்த வளா்ச்சியைப் பதிவு செய்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

