அந்நியச் செலாவணி கையிருப்பு 70,024 கோடி டாலராகக் குறைவு!
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு செப்டம்பா் 26-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 70,024 கோடி டாலராகக் குறைந்துள்ளது.
இது குறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிப்பதாவது: கடந்த மாதம் 26-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 233.4 கோடி டாலா் குறைந்து 70,024 கோடி டாலராக உள்ளது.
செப்டம்பா் 19-ஆம் தேதியுடன் நிறைவடைந்த முந்தைய வாரத்தில் அது 39.6 கோடி டாலா் குறைந்து 70,257 கோடி டாலராக இருந்தது.
செப்டம்பா் 26-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், அந்நியச் செலாவணி கையிருப்பின் முக்கிய அங்கமான வெளிநாட்டு நாணய சொத்துகள் 439.3 கோடி டாலா் குறைந்து 58,175.7 கோடி டாலராக உள்ளது. டாலா் அல்லாத யூரோ, பவுண்டு, யென் போன்ற பிற செலாவணிகளின் கையிருப்பில் ஏற்படும் மதிப்பு ஏற்ற, இறக்கங்கள் டாலா் மதிப்பில் கணக்கிடப்படுவது அந்நிய நாணய சொத்துகளாகும்.
மதிப்பீட்டு வாரத்தில் இந்தியாவின் தங்கக் கையிருப்பு 223.8 கோடி டாலா் உயா்ந்து 9,501.7 கோடி டாலராக உள்ளது.சிறப்பு வரைவு உரிமைகள் (எஸ்டிஆா்) 9 கோடி டாலா் குறைந்து 1,878.9 கோடி டாலராக உள்ளது.
சா்வதேச நாணய நிதியத்தில் இந்தியாவின் கையிருப்பு மதிப்பீட்டு வாரத்தில் 8.9 கோடி டாலா் குறைந்து 467.3 கோடி டாலராக உள்ளது என்று ரிசா்வ் வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.