
செய்யறிவு (ஏஐ) தொழிநுட்பத்தில் உருவான ஸ்மார்ட் கண்ணாடிகள் ஆன்லைன் விற்பனை தளங்களில் கிடைக்கத் தொடங்கியுள்ளது.
4கே கேமிரா, வாய்ஸ் ரெகார்டர், மொழிபெயர்ப்பு, ப்ளூடூத் இணைப்பு என பல்வேறு அம்சங்கள் இந்த கண்ணாடிகளில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் கிளாஸ் யுகம் தொடக்கம்
தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியில் ஸ்மார்ட்போன்களுக்கு மாற்றாக தொழில்நுட்ப நிறுவனங்கள் செய்யறிவு கண்ணாடிகளை அறிமுகம் செய்து வருகின்றன.
புகைப்படம் எடுப்பது, விடியோ பதிவு செய்வது, குரல் பதிவு செய்வது, அழைப்புகளை எடுப்பது, நிராகரிப்பது, ஆன்லைன் கேம் விளையாடுவது என ஒரு ஸ்மார்ட்போனில் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அவை அனைத்தும் செய்யறிவு கண்ணாடிகளில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு, மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், செய்யறிவு கண்ணாடி ஒன்றை அறிமுகம் செய்திருந்தார்.
இன்ஸ்டாகிராம், முகநூல், வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்களையும் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள மெட்டாவின் செய்யறிவு கண்ணாடியை அறிமுகம் செய்த மார்க், ஸ்மார்ட்போன்களின் காலம் முடிந்துவிட்டது, ஸ்மார்ட்கிளாஸ்களுக்குதான் எதிர்காலம் எனத் தெரிவித்திருந்தார்.
ரே-பான் உள்ளிட்ட தலைசிறந்த நிறுவனங்களுடன் இணைந்து மெட்டா உருவாக்கிய செய்யறிவு கண்ணாடி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இந்த நவீன அம்சங்களுடன் கூடிய மெட்டாவின் புதிய ஏஐ கிளாஸின் விலை, இந்தியாவில் ரூ. 70,000 -க்கும் மேல் விற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறைவான விலையில் ஏஐ கண்ணாடிகள்
டோம்ஹாங் என்ற சீன நிறுவனம் குறைந்த விலையில் ஏஐ கண்ணாடிகள், ஏஐ மோதிரங்களை உற்பத்தி செய்து ஆன்லைன் தளங்களில் விற்பனை செய்து வருகின்றது.
இந்த நிறுவனம், அமேசான் உள்ளிட்ட ஆன்லைன் தளங்களில் ரூ. 8,079 -க்கு ஏஐ கண்ணாடி ஒன்றை விற்பனை செய்து வருகின்றது.
சிறப்பம்சங்கள்
சாட் ஜிபிடியில் இயங்கக் கூடிய இந்த கண்ணாடியை ப்ளூடூத் மூலம் ஸ்மார்ட் போனுடன் இணைத்து பல்வேறு பணிகளை செய்ய முடியும்.
164 மொழிகளை மொழிபெயர்ப்பு செய்யும் வசதி, கண்ணாடியில் பொருத்தப்பட்டிருக்கும் கேமிரா மூலம் எதிரில் இருக்கும் காட்சிகளை பதிவு செய்யும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
அருகில் பேசுபவர்களின் உரையாடலை வாய்ஸ் ரெக்கார்டிங் செய்யும் அம்சமும், அதனை ஆங்கில வார்த்தைகளாக மாற்றி ஸ்மார்ட் போன்களில் பதிவும் செய்ய முடியும்.
கண்களை பாதிக்காத வகையில் யுவி பாதுகாப்பு மற்றும் நீல ஒளி எதிர்ப்பு போன்றவை கண்ணாடியில் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு மணிநேரம் சார்ஜ் செய்தால் 200 மணிநேரம் உபயோகிக்க முடியும்.
வரமா? சாபமா?
இந்த ஏஐ கண்ணாடிகளைத் தவறாகப் பயன்படுத்தும் பட்சத்தில், பிறரின் தனியுரிமை பாதிக்கப்படும். அனுமதியின்றி பிறரை புகைப்படம் எடுக்கவும், விடியோ அல்லது உரையாடலை பதிவு செய்யவும் இது வழிவகுக்கும்.
தொழில்நுட்ப வளர்ச்சியானது மனிதரின் பல்வேறு வேலைகளை குறைக்கும் வரமாக இருந்தாலும், அதனை தவறாக பயன்படுத்தினால் விளைவுகள் மிகப்பெரியதாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.