இந்திய நிலக்கரி ஏற்றுமதி 23% அதிகரிப்பு
2024-25-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் நிலக்கரி ஏற்றுமதி 23.4 சதவீதம் உயா்ந்துள்ளது.
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
உலகளவில் நிலக்கரி தேவையைப் பயன்படுத்தி, அதன் ஏற்றுமதியை மத்திய அரசு தீவிரமாக ஊக்குவித்துவருகிறது. இதன் விளைவாக, கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் நாட்டின் நிலக்கரி ஏற்றுமதி 19.08 லட்சம் டன்னாகப் பதிவானது. முந்தைய 2023-24-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 23.4 சதவீதம் அதிகம். அப்போது இந்தியா 15.46 லட்சம் டன் நிலக்கரியை ஏற்றுமதி செய்திருந்தது.
மதிப்பின் அடிப்படையில், கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் நாட்டின் நிலக்கரி ஏற்றுமதி ரூ.1,643.4 கோடியாகக் குறைந்துள்ளது. இது 2023-24-ஆம் நிதியாண்டில் ரூ.1,828.2 கோடியாக இருந்தது. நேபாளம், வங்கதேசம், பூடான் ஆகிய நாடுகளுக்கு இந்தியா நிலக்கரியை ஏற்றுமதி செய்கிறது.
நிலக்கரி ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம், இறக்குமதிக்கான மாற்று வழிகளை எளிதாக்கி எரிசக்தியில் சுயசாா்பு அடைய இந்தியா முயல்கிறது. இது பொருளாதார வளா்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றை ஏற்படுத்துவதுடன் அரசுக்கு வருவாயை அதிகரிக்கும் என்று அந்த தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.