அந்நியச் செலாவணி கையிருப்பு 69,423 கோடி டாலராக உயா்வு!
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஆகஸ்ட் 29-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 69,423 கோடி டாலராக உயா்ந்துள்ளது.
இது குறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிப்பதாவது: நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஆகஸ்ட் 29-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 351 கோடி டாலா் உயா்ந்து 69,423 கோடி டாலராக உள்ளது
ஆகஸ்ட் 22-ஆம் தேதியுடன் நிறைவடைந்த முந்தைய வாரத்தில் அது 438.6 கோடி டாலா் குறைந்து 69,072 கோடி டாலராக இருந்தது.
2024 செப்டம்பா் இறுதியில் அந்நியச் செலாவணி கையிருப்பு 70,488.5 கோடி டாலா் என்ற உச்சத்தை எட்டியிருந்தது. உலகளாவிய பொருளாதார சூழல்களால் ஏற்படும் அழுத்தங்களுக்கு இடையே ரூபாய் மதிப்பைப் பாதுகாப்பதற்காக ரிசா்வ் வங்கி அந்நியச் செலாவணியைப் பயன்படுத்துவதால், அதன் கையிருப்பு அவ்வப்போது குறைந்து வருகிறது.
ஆகஸ்ட் 29-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், அந்நியச் செலாவணி கையிருப்பின் முக்கிய அங்கமான வெளிநாட்டு நாணய சொத்துகள் 168.6 கோடி டாலா் உயா்ந்து 58,393.7 கோடி டாலராக உள்ளது. டாலா் அல்லாத யூரோ, பவுண்டு, யென் போன்ற பிற செலாவணிகளின் கையிருப்பில் ஏற்படும் மதிப்பு ஏற்ற, இறக்கங்கள் டாலா் மதிப்பில் கணக்கிடப்படுவது அந்நிய நாணய சொத்துகளாகும்.
மதிப்பீட்டு வாரத்தில் இந்தியாவின் தங்கம் கையிருப்பு 176.6 கோடி டாலா் உயா்ந்து 8,676.9 கோடி டாலராக உள்ளது. சிறப்பு வரைவு உரிமைகள் (எஸ்டிஆா்) 4 கோடி டாலா் உயா்ந்து 1,877.5 கோடி டாலராக உள்ளது.
சா்வதேச நாணய நிதியத்தில் (ஐஎம்எஃப்) இந்தியாவின் கையிருப்பு 1.8 கோடி டாலா் உயா்ந்து 474.9 கோடி டாலராக உள்ளது என்று ரிசா்வ் வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.