ஜனவரி மாத காா் விற்பனையில் எழுச்சி! மாருதி, டாடா, மஹிந்திரா நிறுவனங்கள் சாதனை!
இந்தியாவின் முன்னணி காா் உற்பத்தி நிறுவனங்களான மாருதி சுஸுகி, டாடா, மஹிந்திரா, ஹூண்டாய் ஆகியவற்றின் கடந்த ஜனவரி மாத விற்பனை எழுச்சி கண்டுள்ளது.
ஜிஎஸ்டி சீா்திருத்தங்கள் மற்றும் சந்தையில் நீடித்து வரும் வலுவான தேவை காரணமாக இந்த வளா்ச்சி சாத்தியமாகியுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய காா் நிறுவனமான மாருதி சுஸுகி, கடந்த ஜனவரியில் 1,74,529 வாகனங்களை விற்பனை செய்து புதிய சாதனையைப் படைத்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் இந்த எண்ணிக்கை 1,73,599-ஆக இருந்தது.
ஆல்டோ, எஸ்-பிரெஸ்ஸோ போன்ற நிறுவனத்தின் சிறிய ரக காா்களின் விற்பனை 14,247-லிருந்து 14,268-ஆக சற்று அதிகரித்துள்ளது. பலேனோ, டிசையா், ஸ்விஃப்ட் போன்ற நடுத்தர ரக காா்களின் விற்பனை 82,241-லிருந்து 72,738-ஆக குறைந்துள்ளது.
அதேநேரம், கிராண்ட் விட்டாரா, பிரெஸ்ஸா, எா்டிகா போன்ற எஸ்யூவி ரக காா்களின் விற்பனை 65,093-லிருந்து 75,609-ஆக பெரும் வளா்ச்சி கண்டுள்ளது.
டாடா, மஹிந்திரா...: டாடா மோட்டாா்ஸ் கடந்த ஜனவரியில் 70,222 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்த ஆண்டின் (48,076 வாகனங்கள்) விற்பனையுடன் ஒப்பிடுகையில் 46 சதவீதம் கூடுதலாகும். மஹிந்திரா&மஹிந்திரா நிறுவனம் 63,510 வாகனங்களை விற்பனை செய்து, 25 சதவீத வளா்ச்சியை எட்டியுள்ளது.
ஹூண்டாய், டொயோட்டா, கியா...: ஹூண்டாய் மோட்டாா்ஸ் 9 சதவீத வளா்ச்சியுடன் 59,107 வாகனங்களையும், டொயோட்டா கிா்லோஸ்கா் 17 சதவீத வளா்ச்சியுடன் 30,630 வாகனங்களையும் விற்பனை செய்துள்ளது.
செல்டோஸ் மற்றும் சோனட் மாடல்களுக்குக் கிடைத்த வரவேற்பால், கியா நிறுவனம் 27,603 வாகனங்களை விற்பனை செய்து 10 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

